Header Ads

சிறுமி மர்மச்சாவில் பரபரப்பு திருப்பம்: மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை

திருப்பூர் அருகே சிறுமியின் மர்மச்சாவில் துப்பு துலங்கியது. வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விட்டு, தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தொழிலாளி

திருப்பூர் நெருப்பெரிச்சல் வாவிபாளையம் பெரிய சமத்துவபுரம் மே நகரில் வசித்து வருபவர் ராதாமணி (வயது 40). இவர் பனியன் கம்பெனி தொழிலாளி. இவருடைய கணவர் கருப்புசாமி. இவர்களது மகள் நளினிபிரியா (14). கருப்புசாமி கடந்த 9 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். கணவர் இறந்த பிறகு, ராதாமணி வேலைக்கு சென்று சம்பாதித்து தன் மகளுடன் தனியாக வசித்து வந்தார்.இந்த நிலையில் தென்னை மரம் ஏறும் தொழிலாளி முருகனுடன் ராதாமணிக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து தாலி கட்டி கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர். நளினிபிரியாவையும் தனது மகள் போல் பாவித்து முருகன் தன்னுடனேயே வைத்துக்கொண்டார்.

சிறுமி மர்ம சாவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராதாமணி வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது நளினிபிரியா விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தார். முருகன் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராதாமணி மயங்கி கீழே விழுந்தார்.உடனே அக்கம்பக்கத்தினர் மயங்கி கிடந்த கணவன்–மனைவி இருவரையும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, நளினிபிரியாவின் உடலை கைப்பற்றி, பிண பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விஷம் கொடுத்து கொலை

சிறுமி மர்ம சாவு குறித்து அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில் சிறுமி நளினிபிரியாவை அவரது தந்தை முருகன் விஷம் கொடுத்து கொன்று, தானும் விஷம் குடித்து உள்ளார் என்பது தெரிய வந்தது.ராதாமணி தனது கணவர் இறந்த பிறகு, தொழிலாளி முருகனை காதலித்து 2–வது திருமணம் செய்து கொண்டார். மகள் நளினிபிரியாவையும் தன்னுடன் வைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு நளினிபிரியா வயதுக்கு வந்துள்ளார். பின்னர் அவர்கள் 3 பேரும் வேலை விசயமாக கேரளாவுக்கு சென்றுள்ளனர்.

அங்கு வேலை பிடிக்காததால் மீண்டும் திருப்பூருக்கே திரும்பி வந்தனர். முருகன் அவினாசி ரோடு புஷ்பா தியேட்டர் அருகே உள்ள தனியார் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் தொழிலாளியாக (லோடுமேன்) வேலை பார்த்து வந்தார். மேலும் அவருக்கு தினமும் மது குடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது.

பாலியல் பலாத்காரம்

முருகன் மதுபோதையில் நளினிபிரியாவை தனது மகள் என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து நளினிபிரியா கர்ப்பம் அடையவே முருகன் பயந்து போய் தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதனால் கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தன் நிலை இப்படி ஆகிவிட்டதே என்று ராதாமணி வருந்தினார்.பின்னர் கணவன்–மனைவி இருவரும் பேசி நளினிபிரியாவின் கர்ப்பத்தை கலைத்துவிட முடிவு செய்தனர். இதற்காக பலரிடம் பணம் கேட்டுள்ளனர். ஆனால் பணம் கிடைக்க வில்லை.இந்த நிலையில் நேற்று முன்தினம் ராதாமணி, மும்மூர்த்திநகரில் வசித்து வரும் தனது அக்காள் பாப்பாவிடம் பணம் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். வீட்டில் நளினிபிரியா, முருகன் இருவர் மட்டும் இருந்துள்ளனர். அப்போது, தான் இப்படி தப்பு செய்து விட்டோமே என்றும், இந்த விஷயம் எல்லோருக்கும் தெரிந்து விட்டதே என்றும் கலங்கி வருந்திய முருகன், தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை (விஷம்) வளர்ப்பு மகள் நளினிபிரியாவுக்கு கொடுத்துள்ளார். இதில் நளினிபிரியா சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் மீதம் இருந்த பூச்சி மருந்தை முருகனும் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

மயங்கி விழுந்தார்

அப்போது வீட்டிற்கு வந்த ராதாமணியிடம், பூச்சி மருந்து கொடுத்து நளினிபிரியாவை கொலை செய்ததையும், தானும் விஷம் குடித்து விட்டேன் என்றும் முருகன் தெரிவித்துள்ளார். இதனால் பதறி அடித்துக்கொண்ட ராதாமணி ‘இப்படி கொலை செய்து விட்டாயே’ என்று சத்தம் போட்டு கதறியுள்ளார். இதில் அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கணவன்–மனைவி இருவரையும் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். நளினிபிரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆபத்தான நிலையில் இருந்த முருகனை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நளினிபிரியாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது என்று தெரிவித்தனர்.

தொழிலாளியும் சாவு

இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று காலை முருகனும் இறந்தார்.ராதாமணி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அனுப்பர்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Powered by Blogger.