இலங்கையில் விடுதலைப்புலிகள் மற்றும் தமிழ் அமைப்புகளுக்கு தடை: மீண்டும் தமிழ் புரட்சி இயக்கத்துக்கு புத்துயிரூட்ட முயற்சிப்பதாக தகவல்
இலங்கையில் விடுதலைப்புலிகள் மற்றும் 15 தமிழ் அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மீண்டும் தமிழ் புரட்சி இயக்கத்துக்கு புத்துயிரூட்ட முயற்சி நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை போர்
இலங்கையில் தமிழ் ஈழம் கேட்டு ஆயுத போராட்டம் நடத்தி வந்த பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் இயக்கத்தை இலங்கை ராணுவம் 2009–ல் நடந்த இறுதிக்கட்ட போரில் அழித்தது.தற்போது இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அங்கு மீண்டும் தமிழ் புரட்சி இயக்கத்துக்கு புத்துயிரூட்ட முயற்சிகள் நடப்பதாக தகவல் பரவியது.
16 இயக்கங்களுக்கு தடை
இலங்கை ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் ருவான் வானிகசூரியா கூறியதாவது:–இலங்கை விடுதலைப்புலிகள் அமைப்பு உள்பட 16 இயக்கங்களுக்கு தடை விதித்துள்ளது. அவற்றுள் முக்கியமானது விடுதலைப்புலிகள் (எல்.டி.டி.இ.), தமிழ் ஈழ தேசிய மாற்று அரசு (டி.ஜி.டி.இ), ஐரோப்பாவில் இயங்கிவரும் உலக தமிழ் கூட்டமைப்பு (ஜி.டி.இ.), லண்டனில் இயங்கிவரும் பிரிட்டிஷ் தமிழ் கூட்டமைப்பு (பி.டி.எப்) ஆகியவை. ஐ.நா. பாதுகாப்பு குழு தீர்மானம் 1373–ன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த அமைப்புகள் தீவிரவாத அமைப்புகள் என்று அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்போது முதல் இந்த அமைப்புகளுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்வது சட்டவிரோதம் ஆகும். இந்த அமைப்புகள் எல்லாம் 4 தனி நபர்களால் நடத்தப்படுகிறது. இந்த தனி நபர்கள் இலங்கைக்குள் வந்தால் தீவிரவாதத்துக்கு எதிரான சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
விசாரணைக்கு உத்தரவு
இந்த அமைப்புகள் குறித்தும், அவர்கள் தீவிரவாதத்துக்கு அளிக்கும் நிதியுதவி தொடர்பாகவும் உரிய விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு ருவான் கூறினார்.கடந்த வாரம் ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேறிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.மாகாண அரசுகளையும் விடுதலைப்புலிகளின் முன்னணி உறுப்பினர்களை குற்றவாளிகள் என்றும், சர்வதேச போலீசாரால் தேடப்படும் தீவிரவாதிகள் என்றும் அறிவிக்கும்படி இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையை சேர்ந்தவர்களும், அரசியல் கட்சியினரும் அந்த அமைப்புகளுடன் தொடர்பு வைப்பதை தவிர்க்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.
No comments: