Header Ads

மான் கராத்தே படத்திற்கு தொடர்ந்து எழும் சர்ச்சைகள்…!

மான் கராத்தே’ படத்திற்கு தியேட்டரில் கூட்டமே இல்லை என்கிறார்கள். ஆனால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்கிறது தயாரிப்பாளர் தரப்பு. நேற்றைக்கு ‘மாஸ் ஹிட்’ என்று மிகப் பெரிய போஸ்டர் அடித்து சென்னை முழுவதும் ஒட்டியிருந்தார்கள்.

மானமுள்ள தமிழர்கள் திருக்குறளை அவமதித்த மான்கராத்தே படத்தை விரட்டியடிக்க வேண்டும் என தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செயலர் இராஜ்குமார் பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை: தமிழ்த் திரைப்படங்களில் தமிழையும் தமிழர்களையும் அவமதிப்பது இப்போது வாடிக்கையாகி விட்டது. முன்பெல்லாம் தமிழர் அல்லாதவர்கள் தான் தமிழர்களையும் தமிழ் மொழியையும் அவமதித்து படம் எடுப்பார்கள்.

இப்போது தமிழர்களே தமிழர்களை அவமதித்து படம் எடுக்கும் சூழ்நிலை வந்துவிட்டது . தமிழ்ச் சமூகம் எந்த அளவிற்கு சுயமரியாதை, மானம் இழந்த சமூகமாக மாறி வருகிறது என்பதற்கு இந்த திரைபடங்களே சான்று . அண்மையில் வெளியான மான் கராத்தே என்ற படத்திலும் தேவையில்லாமல் திருக்குறளை புகுத்தி நையாண்டி செய்துள்ளனர். கதாநாயகியை திருமணம் செய்ய வேண்டுமெனில் பத்து திருக்குறள் தெரிந்திருக்க வேண்டுமாம். இப்படி ஒரு போட்டி தமிழ் நாட்டில் வைப்பது தமிழர்களுக்கே அவமானம் இல்லையா?

அந்த பத்து திருக்குறள் கூட தெரியாமல் ஒரு பெரிய கூட்டமே நாயகியின் வீட்டின் முன்பு திருக்குறளை மனப்பாடம் செய்து கொண்டிருக்கின்றது. இதில் ஒருவர் கூட திருக்குறளை மனப்பாடமாக சொல்ல முடியவில்லையாம் . திருக்குறள் போட்டியில் கலந்து கொள்ளும் ஒருவர் கீழ்க்கண்ட வாறு திருக்குறள் சொல்கிறார்… “ஆட்டலில் சிறந்த ஆட்டல் மாவாட்டல், அவ்வாட்டல் ஓட்டலில் ஆட்டப்படும் ”. இப்படி யாரவது திருக்குறள் சொல்வார்களா ? இது திருக்குறளை திட்டமிட்டு அவமதிக்கும் செயல் அல்லவா? இப்படியான காட்சிக்கு கண்டனம் தெரிவிக்காமல் நம் தமிழ் சமூகம் திரையரங்கில் சிரித்துக் கொண்டு வெளியே வருவது வேதனையளிக்கிறது.

அடுத்ததாக கதாநாயகனுக்கு திருக்குறள் என்றால் என்னவென்றே தெரியாதாம். அதை யார் எழுதினார்கள் என்று கூட தெரியாதாம். தமிழ்நாட்டில் பள்ளியில் சேர்ந்து தமிழ் படிப்பவர்கள் அனைவருக்கும் திருக்குறள் மனப்பாடப் பகுதி ஆகும். அப்படி இருக்கும் போது நாயகனுக்கு திருக்குறள் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்பது தமிழ்ச் சமூகத்தின் மீது தொடுக்கப்பட்ட மற்றுமொரு தாக்குதல் ஆகும். நாயகன் திருக்குறளை எழுதியவர் வைரமுத்து, குறளரசன் என்று அப்பாவித்தனமாக கூறுகிறாராம்.

மேலும் அக்காட்சியில் திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று வகைப்படும் என்று ஒருவர் சொல்கிறார். உடனே நாயகன், ”அப்ப அந்த அமலா பால் ?” என்று நையாண்டி செய்கிறார். அருகில் உள்ள பெண் ஒருவர் காமத்துப்பால் என்றால் என்ன என்று கேட்கையில் அது ஆண் பால் + பெண்பால் கூட கொஞ்சம் பாதாம் பால். அதுதான் காமத்துப்பால் என்று விடை தருகிறார் இன்னொருவர். உலகிற்கு முப்பால் கொடுத்த திருக்குறளையும் , திருவள்ளுவரையும் இத்தகைய கீழ்த்தரமான நகைச்சுவை அவமானப்படுத்துவதாக உள்ளது .

அதன் பின்பு நாயகன் திருக்குறளின் முதல் பாடலை சொல்கிறார் . “அகர முதல எழுத்தெல்லாம் ‘குமரன் சன் ஆப் மகாலட்சுமி’யே உலகு” என்று சொல்லி அடுத்த திருக்குறள் நகைச்சுவையை அள்ளி வீசுகிறார். கதாநாயகியின் வீட்டில் எழுதி உள்ள திருக்குறளை அப்படியே பார்த்து படிக்கிறார் நாயகன். ஆனால் அவர் பிறந்ததில் இருந்து ஒரு குறளைக் கூட படித்தது இல்லையாம். இது எப்படி ஒரு ஏமாற்று வேலை என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்த திரைபடத்தை இயக்கியது ஒரு தமிழர், பெயர் திருக்குமரன். நல்ல தமிழ்ப் பெயரை வைத்துக் கொண்டு தமிழர்களின் ஒப்பற்ற திருக்குறள் நூலையும் தமிழ் மக்களின் திருக்குறள் அறிவையும் கேவலப்படுத்தி உள்ளார் இயக்குனர் திருக்குமரன். தமிழ்பட இயக்குனர்களே ! உங்களுக்கு நகைச்சுவை நையாண்டி செய்வதற்கு வேறு எதுவுமே கிடைக்கவில்லையா ? தமிழர்களின் புனித நூலான திருக்குறள் தான் கிடைத்ததா ? இதுவே இஸ்லாமிய மக்களின் நூலையோ, இந்துக்களின் நூலையோ கேவலப்படுத்தி இருந்தால் அவர்கள் சும்மா விடுவார்களா? தமிழர்கள் மட்டும் என்ன அவமானப்படுத்தினாலும் எதிர்க்க மாட்டார்கள் என்ற தைரியம்தானே உங்களுக்கு !!

இனி தமிழர்கள் நீங்கள் செய்யும் நகைச்சுவைக்கு சிரித்து விட்டு போய் விடமாட்டார்கள். மானமுள்ள தமிழர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் . இப்படியாக தமிழர்களின் பண்பாட்டை , தனித்துவத்தை , அடையாளங்களை இழிவு செய்து படமெடுத்தால் தமிழர்கள் நாங்கள் உங்கள் படங்களை திரையரங்கில் ஓட விடமாட்டோம் என எச்சரிக்கிறோம்.

மான் கராத்தே படத்தில் திட்டமிட்டு திருக்குறளை அவமானப்படுத்திய இயக்குனரை தமிழர் பண்பாட்டு நடுவம் வன்மையாக கண்டிக்கிறது. இதற்கு அந்த இயக்குனர் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழர்களின் சார்பில் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அந்தக் காட்சிகளும் நீக்கப்பட வேண்டும். இனி வரும் காலங்களில் இப்படியான காட்சிகள் தமிழ்ப் படத்தில் இடம்பெறாதவாறு தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். -இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அளித்ததே தவறு. அதனைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று சொல்லி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஐ.ஜெயசீலன் மனு தாக்கல் செய்துள்ளார்.

maan karate13“எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘மான் கராத்தே’ படத்திற்கு வரிவிலக்கு அளித்து வணிகவரித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தப் படத்தை கடந்த 6-ம் தேதி தியேட்டரில் பார்த்தேன்.

இந்தப் படத்தில் மது குடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும்விதமாக ஒரு ஆங்கில பாடல் இடம் பெற்றுள்ளது. மேலும், ‘நாள் முழுவதும் டாஸ்மாக் கடையைத் திறந்து வைத்திருக்க வேண்டும்’ என்றும், ‘தேசிய நெடுஞ்சாலையில் திருட்டுத்தனமாக மதுபானம் விற்க வேண்டும்’ என்றும் அந்தப் படத்தின் கதாநாயகன் கோரிக்கை விடுவது போன்றெல்லாம் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இப்படிப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ள இந்தப் படத்திற்கு தமிழக அரசு எப்படி வரிவிலக்குஅளித்தது என்று எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது. இந்த விஷயத்தில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கலாச்சாரத்தை வளர்க்கும் கதை இருக்க வேண்டும். படத்தின் தலைப்பு தமிழில் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

ஆனால் ‘மான் கராத்தே’ என்ற தலைப்பில் ‘கராத்தே’ என்பது ஜப்பான் மொழியாகும். மேலும் இந்தப் படத்தில் மது குடிப்பதை ஊக்குவிக்கும்விதமான பாடல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. எனவே, இந்தப் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்து தமிழக அரசு கடந்த 4-ம் தேதி பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும்..” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள் மனு மீதான விசாரணையை வரும் ஏப்ரல் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

இந்த வரிவிலக்கு என்பதே கேலிக்கூத்தான விஷயமாக இருக்கிறது. தமிழ் வார்த்தைகள் தலைப்பில் இருக்க வேண்டும் என்று சொல்லி.. கடைசியாக வீட்டில் புழங்கும் வார்த்தைகளாக இருந்தாலும் போதும் என்று சொல்லி விதிமுறையை தளர்த்திவிட்டார்கள்.

குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லி மது ஒழிப்பு பிரச்சாரம் செய்யும் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுத்தான் மத்திய அரசு சென்சார் போர்டுக்கு மது ஒழிப்பு பிரச்சாரங்களை சினிமாவில் காட்டப்பட வேண்டும் என்ற விதிமுறையை வகுத்துக் கொடுத்தது..

அப்படியிருந்தும் ‘எழுத்துதானே.. போட்டுட்டா போச்சு?’ என்று அலட்சியமாகச் சொல்லிய திரையுலகப் படைப்பாளிகள் இன்றைக்கு தங்களது அனைத்து படங்களிலும் டாஸ்மாக் கடைகளைக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

‘மான் கராத்தே’வில் இடம் பெற்றிருக்கும் “Open The Tasmac” என்ற இந்தப் பாடல் காட்சியில் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் கதாசிரியரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர்.முருகதாஸ் இருவருமே கெஸ்ட் ரோலில் காட்சியளித்திருப்பார்கள். அவர்களுக்கே அது முக்கியமான பாடலாகத் தெரிந்திருக்கிறது.. என்னே தமிழர்கள்..?

அந்தப் பாடல் காட்சியும், பாடலும் தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கிறது என்று படம் பார்த்த வரிவிலக்கு அளிக்கும் தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள் நினைத்திருக்கலாம்.. அதனால் சர்டிபிகேட் கொடுத்திருக்கலாம். கவனிக்க.. இதில் சர்டிபிகேட் தரும் தகுதியுள்ள ஒரு சில ஆர்வலர்களுக்கும், அறிஞர்களுக்கும் தமிழ் மொழியில் எழுதவோ, படிக்கவோ தெரியாது என்பதுதான் ஒரு விசித்திரமான உண்மை.

இந்த வழக்கில் கிடைக்கவிருக்கும் நீதி, தமிழ்ச் சினிமாக்காரர்களை அடக்கி வைக்குமா அல்லது ஆட வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!

No comments:

Powered by Blogger.