Header Ads

வடிவேலுவை கோர்ட்டுக்கு இழுக்கும் சிங்கமுத்து!

நிலம் மோசடி என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வடிவேலு-சிங்கமுத்து இருவரும் மல்லுக்கு நின்றார்கள். அதற்கு முன்புவரை பல ஆண்டுகளாக அண்ணன்-தம்பியாக தோள் போட்டுக்கொணடு திரிந்த இவர்களின் காமெடி கூட்டணியும் பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆனது. ஆனால், அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்ட பிறகு இருவருமே தனி வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், ரீ-என்டரியில் கதாநாயகனாக நடித்து தோற்றுப்போன வடிவேலு, மீண்டும் காமெடியனாக கம்பு சுற்ற களமிறங்கயிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதையறிந்த சில படாதிபதிகள் மீண்டும் வடிவேலு- சிங்கமுத்துவை கோர்த்து விடும் நோக்கில் அவர்களை அணுகி வருகின்றனர். அப்படி ஒரு படாதிபதி சிங்கமுத்துவிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியபோது, எனக்கொன்றும் பிரச்னை இல்லை.

ஆனா எனக்கும் வடிவேலுவுக்குமிடையே தீர்க்கப்படாத கோர்ட்டு பிரச்னை சவ்வாக இழுத்துக்கொண்டிருக்கிறது. நான் அவரிடமிருந்து ஏழரை கோடிகளை அமுக்கிக்கொண்டதாக என் மீது புகார் சொன்னார் வடிவேலு. ஆனால், அந்த வழக்கு சம்பந்தமாக நான் இப்போதும் கோர்ட்டுக்கு போகிறேன். ஆனால் அவர் அந்த பக்கம் எட்டிப்பார்க்க மாட்டேங்கிறார். வாய்தா போட்டுக்கொண்டே இருக்கிறார். அதனால், அவரை கோர்ட்டுக்கு வரச்சொல்லி இந்த பிரச்னையை பைசல் பண்ணச்சொல்லிட்டீங்கன்னா. நாங்க மீண்டும் காமெடி கூட்டணி அமைக்கிற முதல் படம் உங்க படமாத்தான் இருக்கும் என்கிறாராம் சிங்கமுத்து.

அவர் எதற்காக வடிவேலுவை இழுக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட படாதிபதிகள், இதெல்லாம் நடிக்கிற காரியமா? என்று தலையில் அடித்துக்கொண்டு செல்கிறார்கள்.

No comments:

Powered by Blogger.