239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தை அல் கய்தா தீவிரவாதிகள் கடத்தல்?
கோலாலம்பூர்: மலேசியாவில் இருந்து 239 பேருடன் சீனா சென்ற விமானத்தை அல் கய்தா தீவிரவாதிகள் கடத்தி இருக்கலாம் என்று இங்கிலாந்தில் வெளியான செய்தியை மலேசிய போலீசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு 239 பேருடன் சென்ற விமானம் கடந்த மார்ச் 8ம் தேதி வியட்நாம் வான்வெளியில் மர்மமான முறையில் மாயமானது. இந்த விமானம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு அருகே கடலில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. கடலுக்கு அடியில் விமானத்தை தேடும் ரோபோ கருவியை அமெரிக்கா தந்து உதவியது. மேலும், சர்வதேச நாடுகளின் கப்பல்கள் மற்றும் விமானங்கள் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் மலேசியாவில் தீவிரவாதிகள் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள்தான் விமானத்தை கடத்தி இருக்கலாம் என்று செய்தி வெளியானது. இதுகுறித்து, இங்கிலாந்தின் Ôடெய்லி மிர்ரர்Õ என்ற இணையதளத்தில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் உலக வர்த்தக கட்டிடத்தை விமானம் மூலம் தகர்த்த அல் கய்தா தீவிரவாதிகளுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் மலேசிய விமானத்தை கடத்தி இருக்கலாம். ஏற்கனவே அல் கய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனின் மருமகன் சுலைமான் அபு காயித்தை அமெரிக்க படையினர் ஜோர்டானில் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர். தற்போது அவர் மீது நியூயார்க் நகர நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜரான மற்றொரு அல் கய்தா தீவிரவாதியும் பின்லேடனின் உறவினருமான சாஜித் பாதத் அளித்த சாட்சியத்தில், Ôபுனித போர் (ஜிகாத்) நடத்துவதற்காக சிலரை ஆப்கனில் சந்தித்தேன். அவர்களில் ஒருவர் விமானி. அவரிடம் ஷூ வெடிகுண்டை கொடுத்தேன். அவருடன் தொடர்புடைய சிலர் மலேசியா மற்றும் பிலிப்பைன்சில் ஜிகாத் நடத்த தயார் செய்யப்பட்டனர்Õ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் மலேசியாவில் 11 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள்தான் விமானத்தை கடத்தி சென்றிருக்கலாம்.
இவ்வாறு டெய்லி மிர்ரர் இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது. மாயமான மலேசிய விமானத்தின் விமானிக்கு அல் கய்தா தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்கனவே உள்ளது. ஆனால், இந்த செய்திகளை மலேசிய போலீசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதுகுறித்து மலேசிய போலீஸ் அதிகாரி கலீத் அபு பக்கர் கூறுகையில், Ôமலேசிய தீவிரவாத தடுப்பு படையினர் 11 பேரை கைது செய்தது உண்மைதான். அவர்கள் அனைவரும் சிரியா மற்றும் தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு உடையவர்கள். அவர்கள் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டு பயிற்சி அளித்து சிரியாவுக்கு செல்ல இருந்தவர்கள். அவர்களுக்கும் மாயமான விமானத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இங்கிலாந்து இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி மிகவும் வெட்கக்கேடான ஒன்றுÕ என்று மறுத்தார். இதனால் மர்மம் நீடிக்கிறது.
No comments: