Header Ads

அன்புடன் அந்தரங்கம்

அன்புள்ள அம்மாவுக்கு,— 
எனக்கு இரண்டு சகோதரி கள்; நான்தான் கடைசி. என் மூத்த அக்காவின் கணவரை விரும்புகிறேன். அவர், ஏற்கனவே பல பெண்களை காதலித்தவர் என்று, அக்கா கூறியுள்ளார். நானும், அவரது வலையில் விழுந்து விட்டேன்.
இதற்கிடையில், என் இரண்டாவது அக்காவை மயக்கி, எப்படியோ தன் ஆசைக்கு இணங்க வைத்து விட்டார். அவள் இப்போது, மன நிம்மதி இன்றி, நடைபிணமாக வாழ்ந்து வருகிறாள்.
மாமா சிறுவயதில் இருந்தே, எங்கள் வீட்டில் தான் வளர்ந்து வந்தார். பார்ப்பதற்கு, அழகாக, கம்பீரமாக இருப் பார். என் மாமாவுடன் பேசக் கூடாது, பழகக் கூடாது என்று நினைத்தாலும், அவர் எப்படியாவது பேசி, என் உறுதியை குலைத்து விடுகிறார். அவரிடம் என்னை பலமுறை இழந்திருக்கிறேன். என் படிப்பிற்கான செலவை, அவர்தான் பார்த்துக் கொள்கிறார்.
மனநிம்மதி இன்றி தத்தளித்து வருகிறேன். என் மாமாவிடம் இருந்து விடுபடுவது எப்படி? எனக்கு நிம்மதி கிடைக்குமா, இனி எனக்கு வாழ்க்கை உண்டா அல்லது சாவு தான் வழியா... நீங்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும்.
— உங்கள் மகள்

அன்புள்ள மகளுக்கு —
உன் நிலை, எனக்கு புரிகிறது. உன் மாமா தான் பிரச்னை என்பதை, நீயே தெளிவாக குறிப்பிட்டிருக்கிறாய். பின், ஏன் அவரைப் பற்றி உயர்வாக துதி பாடுகிறாய்? எங்கோ இடிக்கிறதே... 
பல பெண்களை காதலித்திருக்கிறார்... இரண்டாவது அக்காவையும் கெடுத்திருக்கிறார் போன்ற, 'சிறப்பு தகுதிகளை' பெற்ற, உன் மாமாவை, நீயும் காதலிக்கிறாய்; அவருடன் எல்லை மீறி பழகியும் இருக்கிறாய். அந்த நபர் எப்படிப்பட்டவர் என்று தெரிந்திருந்தும், அவரை நீ முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கிறாய். உன் பிரச்னை எங்கு ஆரம்பமாகிறது என்று, உன்னால் உணர முடிகிறதா?
சிறுவயதிலிருந்து உன் வீட்டில் வளர்ந்தார் என்பதற்காக, அக்காவின் கணவரான பின்பும், நீ, அவரிடம் முறை தவறி நடந்து கொண்டது சரியா? அக்கா கணவர், தந்தைக்கு சமம் என்பதை, உன் வீட்டில் யாரும் உனக்கு கற்றுத் தரவில்லையா?
இந்த விஷயம் உன் அக்காவிற்கு தெரிந்தால், அவர் மனம், என்ன பாடுபடும் என்று, நினைத்துப் பார்த்தாயா?
'நிம்மதியாக வாழ என்ன வழி...' என்று, கேட்டிருக்கிறாய். நம் நிம்மதி, நமக்குள் தான் இருக்கிறது என்ற எதார்த்தமான உண்மையை தெரிந்து கொள்.
தூய சிந்தனைகள், அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணங்கள், செய்த தவறை ஒப்புக் கொள்வது, தவறை மன்னிக்கும் குணங்கள்... இத்தகைய குணங்கள் தான், நமக்கு நிம்மதி கிடைக்க வழி செய்யும்.
இதுவரை, உன் மாமாவின் செயல்களுக்கு, உடந்தையாக இருந்ததை மறந்து விடு என்று கூற மாட்டேன். சிறிது சிறிதாக மனதை கட்டுப்படுத்தி, அந்த அசிங்கத்திலிருந்து வெளியில் வர முயற்சி செய். 'பாவம் செய்து விட்டேன்' என்ற குற்ற உணர்வில், மனதுக்குள் மறுகுவதை விட, அதிலிருந்து மீண்டு, இனிமேல் எப்படி வாழ வேண்டும் என்பதை திட்டமிடு; உனக்கு நிம்மதி கிடைக்கும்.
உன் மாமாவிடம் சட்டென்று உறவை முறித்துக் கொள்ள முயலாதே! அது, சந்தேகத்தை எழுப்பும். இனிமேல், நீ கிடைக்கப் போவது இல்லை என, தெரிய வரும்போது, அவரிடம் பழி வாங்கும் எண்ணம் வரலாம். சூழ்நிலையைப் புரிந்து, புத்திசாலி பெண்ணாக நடந்து கொள்.
அன்பு, பாசம், அக்கறை போன்றவைகளை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அவைகளை மற்றவர்களுக்கு வழங்கினால், உனக்கும் அது திரும்ப கிடைக்கும்.
செய்த தவறை உணர்ந்த காரணத்தால், அவைகளை களைய முயற்சி செய்வது நல்லது. புதிய வாழ்க்கை நிச்சயம் பிறக்கும். சுயதொழில் ஏதேனும் ஒன்றை கற்று, உன் சொந்தக்காலில் நிற்க முயற்சி செய்; சுய ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள். இதனால், வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படும்.
இப்படிதான் வாழ வேண்டும் என்ற உறுதி உனக்குள் ஏற்படும் போது, வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாய் எழாது.
கோழைகள், முதுகெலும்பு இல்லாதவர்கள், வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடத் தெரியாதவர்கள், தன்னம்பிக்கை அற்றவர்கள் தான், வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைப்பர். நீ அப்படிப்பட்ட பெண் இல்லை.
வாழ்க்கை என்பது பகிர்ந்து, அனுபவித்து வாழத்தான். எனவே, முழுமையாக வாழக் கற்றுக் கொள். குன்றின் மேல் இட்ட விளக்கு பிரகாசமாக எரிந்து, மற்றவர்களுக்கு வழிகாட்டுவது போல உன் வாழ்வு, பிரகாசமாக, அர்த்தமுள்ளதாக இருக்க, என் வாழ்த்துகள்.

No comments:

Powered by Blogger.