Header Ads

காட்பாடியில் பயங்கரம்: 9 வயது சிறுமி ஓட ஓட விரட்டி கொலை தாய்மாமன் கைது



அக்காள் காதல் திருமணம் செய்ததால் 15 ஆண்டுக்கு பிறகு அவரது 9 வயது மகளை தாய்மாமனே கத்தியால் ஓட ஓட விரட்டி கொலை செய்த பயங்கரம் காட்பாடியில் நடந்துள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

காதல் திருமணம்

வேலூர் அடுத்த அரியூர் ஆர்.கே.நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 40). எலக்ட்ரீஷியன். இவரும் காட்பாடி ஜாப்ராபேட்டை அம்பேத்கார் நகரை சேர்ந்த உஷா என்ற லில்லியும் (34) கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிரியா (14), பிரியங்கா (9) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

உஷா காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரது தம்பி டேவிட் என்ற பெருமாளுக்கு (28) இவர்கள் குடும்பத்தை பிடிக்கவில்லை. அக்காள் மீது ஏற்பட்ட ஆத்திரம் அவரது குழந்தைகள் மீதும் இருந்தது. எனினும் டேவிட்டுக்கு தெரியாமல் உஷா தனது கணவர் சங்கருடன் வந்து செல்வார்.

டேவிட்டின் தங்கை ஆஷாவுக்கு வருகிற 4–ந் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பத்திரிகை கொடுக்கும் பணியில் உஷாவும் அவரது கணவர் சங்கரும் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் சங்கர் தனது மாமியாருடன் பத்திரிகை கொடுப்பதற்காக வெளியூர் சென்றிருந்தார். உஷா அவரது வீட்டிற்கு சென்று விட்டார். அவரது மகள் மகள் பிரியங்கா, மணமகளான சித்தி ஆஷாவுடன் வீட்டில் இருந்தாள்.

கழுத்தறுத்து கொலை

இந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு குடிபோதையில் வீட்டுக்கு வந்த டேவிட் கதவை தட்டினார். அவரது தங்கை ஆஷா கதவை திறந்தார். அப்போது வெளியில் நின்றிருந்த டேவிட், ‘‘வீட்டில் இருக்கும் உஷாவின் மகள் பிரியங்காவை வெளியில் அனுப்பு’’ என்று கூறி உள்ளார். இதற்கு ஆஷா மறுத்துவிட்டார். ‘‘காதல் திருமணம் செய்த உஷா இங்கு வரக்கூடாது. அவளது குழந்தைகளும் இங்கு இருக்கக்கூடாது’’ என அவர் கூறினார்.

இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த டேவிட் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த கத்தியை எடுத்து சிறுமி பிரியங்காவின் கையில் வெட்டி உள்ளார். இதனால் சிறுமி அலறியடித்துக்கொண்டு டேவிட்டிடம் இருந்து தப்பி ஓடினாள்.

அதன்பிறகும் ஆத்திரம் அடங்காத டேவிட், வெளியில் ஓடிச்சென்ற பிரியங்காவை விரட்டி சென்றார். சிறுமியென்றும் பாராமல் பிரியங்காவை கழுத்து, மணிக்கட்டு ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சிறுமி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதனை தடுக்க முயன்ற மணமகள் ஆஷாவுக்கும் வெட்டு விழுந்தது.

சரண் அடைந்தார்

அவசர கோலத்தில் சிறுமியை கொலை செய்து விட்டோமே என டேவிட் அதிர்ச்சியடைந்தார். அதன்பின்னர் அவர் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமாரிடம் சரண் அடைந்து நடந்த விவரங்களை கூறினார். உடனடியாக டேவிட் என்ற பெருமாளை காட்பாடி போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் ஒப்படைத்தார். கொலை நடந்த இடத்துக்கு காட்பாடி போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சிறுமியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து டேவிட் என்ற பெருமாள் மீது காட்பாடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

No comments:

Powered by Blogger.