Header Ads

முன்னாள் காதலருக்கு நோட்டீஸ் அனுப்பிய பிரியங்கா சோப்ரா!

இந்தித் திரையுலகின் முன்னணி நடிகையும், விஜய் ஜோடியாக 'தமிழன்' படத்தில் நடித்தவருமான பிரியங்கா சோப்ரா அவரது முன்னாள் காதலனுக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். பிரியங்கா மாடலாக இருந்த போது அவரைக் காதலித்தவர் என சொல்லப்பட்டவர் அசீம் மெர்ச்சென்ட். பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர்.

பிரியங்கா நடிகையானதும் அவரிடம் மேனேஜராக இணைந்தவர் பிரகாஷ் ஜாஜு. 2008ம் ஆண்டு பிரியங்காவுக்கும், அவரது மேனேஜருக்கும் கொடுக்கல், வாங்கலில் பிரச்னை ஏற்பட்டது. பின்னர் பிரியங்காவின் அப்பா கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரகாஷ் ஜாஜு கைது செய்யப்பட்டு 67 நாட்கள் சிறையிலும் இருந்தார். தற்போது, பிரியங்காவின் மேனேஜராக இருந்த பிரகாஷ் ஜாஜுவின் வாழ்க்கைக் கதையை படமாக எடுக்கப் போவதாக பிரியங்காவின் முன்னாள் காதலரான அசீம் மெர்ச்சென்ட் அறிவித்துள்ளார். இதையடுத்து, பிரியங்கா அவருக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் அவரது குடும்பத்தைப் பற்றியுமே படமாக எடுக்கப் போவதாக படத்தைப் பற்றி விளம்பரப்படுத்தியதிலிருந்தே தெரிகிறது. அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் விதத்தில் படத்தை எடுக்க முயல்வதாகவும் தெரிகிறது. எனவே, உடனடியாக படத்தைப் பற்றிய விளம்பரங்களைத் திரும்பப் பெற வேண்டும் என அந்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், அசீம் மெர்ச்சென்டோ, “இந்த படத்தில் என்னைப் பற்றியும், பிரகாஷ் ஜாஜுவைப் பற்றி மட்டுமே கதையை அமைத்துள்ளோம். பிரியங்காவுக்கு ஏதாவது ஆட்சேபணை இருந்தால், படத்தையே நிறுத்தி விடுகிறோம். அவருடைய சென்டிமென்டை நான் குலைக்க விரும்பவில்லை. பிரியங்கா படத்தில் ஒரு பகுதியாகத்தான் வருகிறார், ” என்று கூறியுள்ளார்.

No comments:

Powered by Blogger.