Header Ads

நிச்சயதார்த்தம் நடத்தி வைத்த பாதிரியாருடன் ஆசிரியை ஓட்டம்

களியக்காவிளை : நிச்சயதார்த்தம் நடத்தி வைத்த பாதிரியாருடன் ஆசிரியை ஓட்டம் பிடித்தார். பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் காதல் ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.கேரள மாநிலம் வயநாடு, மானந்தவாடி பகுதியை சேர்ந்தவர் பீட்டர் (28). இவர் கடந்த 3 ஆண்டுகளாக களியக்காவிளை அருகே வயலங்கரையில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக இருந்து வந்தார். வயலங்கரை பகுதியை சேர்ந்தவர் பிலோமினா (23). (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது) முதுகலை பட்டதாரியான இவர் வாறுதட்டுவிளை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். பிலோமினா வயலங்கரையில் உள்ள தேவாலயத்திற்கு சென்று வந்துள்ளார்.அப்போது பாதிரியார் பீட்டருக்கும் பிலோமினாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் செல்போனிலும் தொடர்பு கொண்டு பேசி வந்ததாக தெரிகிறது. இது நாளடைவில் காதலாக மலர்ந்தது. இந்த காதலுக்கு பிலோமினாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பிரபலமான கேரள ஓட்டலில் மேலாளராக வேலை பார்க்கும் நித்திரவிளையை சேர்ந்த வாலிபர் ஒருவரை புலோமினாவுக்கு பேசி முடித்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தமும் நடந்தது. நிச்சயதார்த்தத்தை பாதிரியார் பீட்டர் நடத்தி வைத்துள்ளார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் பிலோமினா, மார்த்தாண்டம் சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். நேற்று மதியம் பிலோமினாவின் தாயை பீட்டர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது, நீங்கள் உங்கள் மகளை தேட வேண்டாம். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து ஊரை விட்டு செல்கிறோம் என பீட்டர் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து புலோமினாவின் தாயார் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.

No comments:

Powered by Blogger.