Header Ads

விடுதலைப் புலிகள் தலைவரை பிடிக்க இண்டர்போல் உதவியை நாடும் இலங்கை..

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்து வந்த போர் 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அதன் பின்னரும் இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு, விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் தமிழர்களை கைது செய்து வருகிறது. கடந்த 10-ம் தேதி மட்டும் 65 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

அன்றிரவு வவுனியா மாவட்டத்தின் வடக்குப்பகுதியில் உள்ள நெடுங்கேணி காட்டுப்பகுதியில் ராணுவம் சுற்றி வளைத்தது. அப்போது அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற கஜீபன் போன்னையா செல்வநாயகம் என்ற கோபி, அப்பன் மற்றும் சுந்தரலிங்கம் காஜீபன் என்ற தேவியன் ஆகிய 3 பேரை சுட்டுக்கொன்றதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ருவான் வணிகசூர்யா தெரிவித்தார். 

கொல்லப்பட்டவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், விடுதலைப்புலிகள் அமைப்புக்கு புத்துயிர் கொடுக்க முன்றதாகவும் வணிகசூர்யா குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், ஐரோப்பிய கண்டத்தில் இருந்தபடி விடுதலைப்புலிகள் அமைப்புக்கு புத்துயிர் அளிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, வெளிநாட்டில் வாழும் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் நெடியவன் மற்றும் வினாயகம் ஆகியோரை பிடித்து தங்களிடம் ஒப்படைக்கும் வகையில் எச்சரிக்கை நோட்டீஸ் வெளியிட வேண்டும் என்று சர்வதேச போலீசான இண்டர்போலை இலங்கை அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக இலங்கை போலீஸ் செய்தி தொடர்பாளரான சூப்பிரண்ட் அஜித் ரோஹனா தெரிவித்துள்ளார்.

இவர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்தபடி, இலங்கையில் மேலும் ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்த தயாராகி வருவதாகவும், இதில் வினாயகத்தின் பெயர் இண்டர்போலின் தேடுதல் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவர்களில், நெடியவன் நார்வேயில் இருந்தபடியும், வினாயகம் பிரான்ஸ் நாட்டில் இருந்தபடியும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பொருளாதார ரீதியான ஆதரவை திரட்டி வருவதாக இலங்கை அரசு குற்றம் சாட்டி வருகிறது.

No comments:

Powered by Blogger.