Header Ads

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதையடுத்து, அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். 

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. தலைமை நீதிபதி தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகூர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது. ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் ஃபாலி நரிமன் உச்சநீதிமன்றத்தில் வாதாடினார். பின்னர் ஜெயலலிதாவை ஜாமினில் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. 21 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் ஜெயலலிதா ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதையடுத்து அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்தனர். 

போயஸ் கார்டன் மற்றும் கட்சி தலைமை அலுவலகத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் ஜாமின் மனுக்களையும் பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவர்களுக்கு ஜாமின் வழங்க உத்தரவிட்டனர். 

No comments:

Powered by Blogger.