பறவை பட இசையமைப்பாளரின் பந்தா ஆரம்பம்…!
பறவை பட பெயர் கொண்ட காதல் படத்தின் மூலம் பிரபலமான அந்த இசையமைப்பாளர் சமீப காலமாக அவரைத் தேடி வரும் இயக்குனர்களை மதிப்பதேயில்லையாம். தொடர்ச்சியான வெற்றி அவரை இந்த அளவிற்கு மாற்றிவிட்டது என்கிறார்கள். சினிமாவிற்கு வந்து ஏறக்குறைய 15 ஆண்டுகள் போராடியவருக்கு சமீப காலமாகக் கிடைத்த புகழ் அவரை ரொம்பவே பந்தா செய்ய வைத்து விட்டது என்கிறார்கள். அவர் இசையமைத்துக் கொடுப்பதுதான் சிறந்தது என்கிறாராம், இயக்குனர்கள் சொன்னால் அதை கேட்டுக் கொள்வதேயில்லையாம். நான் போடற பாடல்கள் எல்லாம்தான் இப்ப அதிகமா ஹிட் ஆகிறது என ஆணவப் பேச்சு வேறு பேசுகிறாராம்.
புதிதாக கூட டியூன்களை உருவாக்காமல் ராஜ ரகசியமாக காப்பி அடித்துத்தான் பல டியூன்களை போடுகிறார். ஏதோ அவருடைய நல்ல நேரம் படங்களும் ஓடிவிடுகின்றன. சம்பளத்தைக் கூட அதிகமாக உயர்த்தி விட்டார். வெற்றி கிடைத்தால் பணிவுதானே வரவேண்டும், இவருக்கென்ன பந்தா வந்து விட்டதே என அவரைத் தேடிப் போன இயக்குனர்கள் சிலர் திரும்பி வருவதாகவும் கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.
தற்போது புதுப்புது இசையமைப்பாளர்கள் பலர் வந்து விட்ட நிலையில் நாம் சொல்வதைக் கேட்கும் புது இசையமைப்பாளர்களை பயன்படுத்திக் கொள்வதே நல்லது என பல புது இயக்குனர்கள் முடிவெடுத்திருக்கிறார்களாம். மகனுக்காக ஓடியாடி வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்த தந்தைக் குலமும் மகனின் இந்த செய்கையைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
No comments: