Header Ads

19 சிறுமிகளை கொன்றவனை தூக்கில் போட தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

டெல்லி அருகே உள்ள நித்தாரி கிராமத்தில் கடந்த 2005 மற்றும் 2006–ம் ஆண்டுகளில் 19 சிறுமிகள் கற்பழித்து கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த வழக்கில் தொழில் அதிபர் மொகிந்தர் சிங், அவரது வீட்டு வேலைக்காரர் சுரேந்தர் கோலி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த இருவருக்கும் காசியா பாத் சிறப்பு கோர்ட்டு 2009–ம் ஆண்டு பிப்ரவரி 13–ந் தேதி மரண தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து சுரேந்தர் கோலியும், மொகிந்தர் சிங்கும் அலகாபாத் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.மனுவை விசாரித்த கோர்ட்டு 2009 செப்டம்பர் 11–ந் தேதி சுரேந்தர் கோலியின் தண்டனையை உறுதி செய்தது. மொகிந்தர்சிங் விடுதலை செய்யப்பட்டார்.

தூக்குதண்டனையை எதிர்த்து சுரேந்தர் கோலி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதே போல ஜனாதிபதியும் கருணை மனுவை தள்ளுபடி செய்தார். இதை தொடர்ந்து வருகிற 12–ந் தேதி சுரேந்தர் கோலி தூக்கிலிடப்படுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அவரை இன்று தூக்கில் போட ஜெயில் அதிகாரிகள் திட்ட மிட்டு இருப்பதாக தகவல் வெளியாயின. இதற்காக காசியாபாத்தில் உள்ள தஸ்னா சிறையில் இருந்து மீரட் ஜெயிலுக்கு அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டார்.

இந்த நிலையில் சுரேந்தர் கோலியை தூக்கிலிட சுப்ரீம் கோர்ட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. 1 வாரத்துக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி கோலியின் வக்கீல் மேல் முறையீடு செய்து இருந்தார். இந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் எச்.எல். தத்து விசாரித்து இந்த தடையை விதித்தார். தனது வீட்டில் நள்ளிரவு இந்த உத்தரவை பிறப்பித்தார்.

No comments:

Powered by Blogger.