Header Ads

பின்லேடன் கொல்லப்படவில்லை: அமெரிக்காவால் கடத்தப்பட்டார் - குவைத் பேராசிரியர் அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 120 கி.மீட்டர் தூரத்தில், இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நகரம் அபோட்டாபாத். பாகிஸ்தான் அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் வசிக்கும் அபோட்டாபாத்தில் பல ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்த அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடன், கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தின் 'சீல்' அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

அவனது சடலத்தை கடலின் நடுவே அடக்கம் செய்து விட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் நடந்து முடிந்து 3 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் குவைத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் தற்போது அதிர்ச்சிகரமான புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக குவைத்தில் பேட்டியளித்த அரசியல் அறிவியல் பேராசிரியரான அப்துல்லா அல் நஃபீசி கூறியதாவது:-

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறுவது உண்மையல்ல. அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறுவதை நான் சந்தேகிக்கிறேன். அவர் அமெரிக்காவால் கடத்தப்பட்டார். இன்னும் உயிருடன் மறைத்து வைக்கப்பட்டுள்ளார் என்றே நான் நம்புகிறேன்.

உலகின் மிகப்பெரிய சக்தியான அமெரிக்கா, 11 ஆண்டுகளாக வலை வீசி தேடி வந்த பின்லேடனை கண்டவுடன் சுட்டுக்கொன்று விட்டது என கூறப்படுவது கைதேர்ந்த ஒரு தேடுதல் நடவடிக்கை போல் எனக்கு தோன்றவில்லை. சுத்த கத்துக்குட்டித்தனமான அமெச்சூர் நடவடிக்கையாகவே இதை கருத வேண்டியுள்ளது.

இல்லாவிட்டால் கோடிக்கணக்கான டாலர்களை செலவழித்து 11 ஆண்டுகளாக அவரை தேடி கண்டுபிடித்ததன் பலன் தான் என்ன? என்னைப் பொருத்தவரை ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கடத்திச் சென்று உயிருடன் வைத்துள்ளது. இந்த உண்மையை மறைப்பதற்காக அவரை சுட்டுக் கொன்று பிணத்தை நடுக்கடலில் புதைத்து விட்டதாக அமெரிக்கா பொய்யை பரப்பி வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பேராசிரியர் அப்துல்லா அல் நஃபீசி வெளியிட்டுள்ள இந்த தகவல் தற்போது மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  

No comments:

Powered by Blogger.