நடிகை ஜியாகான் தற்கொலை வழக்கை இந்திய போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்த அமெரிக்கா விருப்பம்
நடிகை ஜியாகான் தற்கொலை வழக்கு குறித்து இந்திய போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்த அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தி நடிகை ஜியாகான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார், ஜியாகானை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது நண்பரும், பிரபல இந்தி நடிகர் ஆதித்ய பஞ்சோலியின் மகனான சூரஜ் பஞ்சோலியை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையே ஜியாகான் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கையை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
அதில் ஜியாகான் கொலை செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்காததால் அவரின் இறப்பு தற்கொலையே எனக் கூறப்பட்டு இருந்தது. போலீசாரின் இந்த குற்றப்பத்திரிக்கை குறித்து ஜியாகானின் தாயார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் போலீசாரின் குற்றப்பத்திரிகைக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர போவதாவும் கூறினார். இந்தநிலையில் நடிகை ஜியாகானின் தாயாரின் இ–மெயில் முகவரிக்கு அமெரிக்க போலீசார் தொடர்பு கொண்டுள்ளனர்.
அதில் அவர்கள், ஜியாகான் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் பிறந்தவர். மேலும் அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். எனவே அவரின் தற்கொலை வழக்கை இந்திய போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்த விரும்புவதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க போலீசார்(எப்.பி.ஐ.) ஜியாகான் வழக்கை விசாரிக்க விருப்பம் தெரிவித்துள்ளதால், ஜியாகான் தற்கொலை வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments: