ஜில்லா, வீரம் படங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி: விஜய் பேச்சு
விஜய் நடித்த ‘ஜில்லா’ படம் கடந்த 10–ந்தேதி ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.
நடிகர் விஜய், டைரக்டர் நேசன், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, இசையமைப்பாளர் இமான், காமெடி நடிகர் சூரி மற்றும் விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் ‘ஜில்லா’ படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் பேசும்போது துப்பாக்கியை விட ஜில்லா படம் அதிக வசூல் ஈட்டியுள்ளது என்றனர்.
நடிகர் விஜய் பேசியதாவது:–
ஜில்லா படம் வெற்றிகரமாக ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. என் ரசிகர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தியேட்டர்களில் ரசிகர்கள் காலை 3 மணிக்கே திரண்டு பனி, குளிரையெல்லாம் பொருட்படுத்தாமல் கொடி தோரணம் அமைத்தனர். தியேட்டர்களை அலங்காரம் செய்தார்கள். சிரமங்களை பொருட்படுத்தாமல் கடுமையாக வேலை செய்துள்ளனர். இதையெல்லாம் வீடியோவில் பார்த்து நெகிழ்ந்தேன். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை. ரசிகர்களுக்கு நன்றி சொல்லவே வந்தேன்.
‘ஜில்லா’ படத்தை ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. இந்த நிறுவனம் தயாரித்த 5 படங்களில் நடித்துள்ளேன். எல்லா படங்களும் வெற்றி பெற்றுள்ளன.
இசையமைப்பாளர் ‘இமான்’ ஜில்லா படத்துக்கு சிறப்பாக இசையமைத்துள்ளார்.
பொங்கல் பண்டிகையில் ஜில்லாவுடன் அஜீத்தின் வீரம் படமும் ரிலீசாகியுள்ளது. வீரம் படமும் நன்றாக ஓடுவதாக கேள்விப்பட்டேன். இது ஆரோக்கியமானது. அஜீத்துக்கும் அப்படத்தின் டைரக்டர் சிவாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பொங்களுக்கு வந்த இரண்டு படங்களும் நன்றாக ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
விநியோகஸ்தர்கள் ஜில்லா படம் அதிகம் வசூல் ஈட்டியுள்ளதாக இங்கே பேசினர். விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி அடைந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான்.
இவ்வாறு விஜய் பேசினார்.
தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி பேசும்போது, ‘ஜில்லா’ படம் அதிக நேரம் ஓடுவதாக கூறினர். இதனால் 10 நிமிட காட்சிகளை குறைத்தோம். ஒரு பாடல் காட்சியையும் நீக்கினோம். ஆனால் அந்த பாடல் படத்தில் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தினர். இதனால் அப்பாடல் மீண்டும் படத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது என்றார்.
No comments: