நாய்கள் கண்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்த நமீதாவின் நாய்குட்டி
மெட்ராஸ் கெனைன் கிளப்’ சார்பில் நாய்கள் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. கண்காட்சியின் முதல் நாளில் நாய்கள் தங்கள் எஜமானர்களின் சொல்லுக்கு கீழ்படிதல் உள்பட 7 சுற்று போட்டிகள் நடைபெற்றன.
கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று நாய்களுக்கான அலங்கார அணிவகுப்பு, உடல் தகுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 45 இனங்களை சேர்ந்த 365 நாய்கள் கலந்து கொண்டன.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ‘ஆப்கான் ஆர்னால்’ இன நாய்கள், ஜெர்மனியை சேர்ந்த ‘பிளாஸா பிரச்சிலா’ இன நாய்கள், சுவிட்சர்லாந்தை சேர்ந்த ‘சென்பெனாஞ்ச்’ இன நாய்கள், புல் டிடெரியர், அகிடா உள்பட பல்வேறு வெளிநாட்டு இன வகை நாய்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கொண்டு வந்த செர்பியாவை சேர்ந்த ‘செர்பியன் ஹஸ்கி’ நாயையும், நடிகை நமீதா கொண்டு வந்த ‘சாக்லெட்’ என்று பெயரிடப்பட்ட நியூசிலாந்தை சேர்ந்த நாயையும் பார்வையாளர்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.
ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை போன்ற தமிழகத்தின் பிரபல வேட்டை நாய்கள் அணிவகுத்து வந்த காட்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. நாய்களின் அழகு, அறிவுத்திறமை, கீழ்படிதல் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
சர்வதேச நடுவர்களான போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த மானுல் போர்ஜெஸ், மலேசியாவை சேர்ந்த லேரி யூன், இந்தியாவை சேர்ந்த டாக்டர் மாத்யூ சி.ஜான் ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த நாய்களை தேர்ந்தெடுத்தனர். பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இந்து என்.ராம், அமலாக்கப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. காந்திராஜன் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற நாய்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினர்.
நடிகர் சிபிராஜ் உள்பட முக்கிய பிரமுகர்களும், ஏராளமான பொதுமக்களும் நாய்கள் கண்காட்சியை பார்த்து ரசித்தனர்.
No comments: