Header Ads

விஜய்க்கு அடுத்து விஜய் சேதுபதிதான்...


தீபாவளிக்கு அஜித் நடிச்ச 'ஆரம்பம்’ படத்தோட 'பாண்டிய நாடு’ படமும் ரிலீஸ் ஆச்சு. இப்போ 'நான் சிகப்பு மனிதன்’னு ரஜினி பட டைட்டில் வெச்சுக்கிட்டே 'கோச்சடையான்’ படத்தோட மோதுறீங்களே! இது புது கேம் பிளானா?'' - எடுத்த எடுப்பிலேயே இந்தக் கேள்வியை விஷால் எதிர்பார்க்கவில்லை. ஒரே ஒரு நொடி யோசித்தவர், பளிச் பதில் தந்தார்...

''நான் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கும்போதே, பட பூஜை போடும் அன்னைக்கே ரிலீஸ் தேதியை அறிவிச்சிடணும்னு உறுதியா இருந்தேன். 'பாண்டிய நாடு’ தீபாவளி ரிலீஸ்னு நாங்க முடிவு பண்ணபோது, வேற என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகும்னு தெரியாது. 'ஆரம்பம்’ ரிலீஸ் உறுதியானதும், 'வீம்புக்காகப் படத்தை ரிலீஸ் பண்ணணுமா? ரெண்டு வாரம் கழிச்சு வெளியிடலாமே’னு பலரும் சொன்னாங்க. நல்லதோ, கெட்டதோ, எடுத்த முடிவில் உறுதியா இருப்போம்னு 'பாண்டிய நாடு’ ரிலீஸ் பண்ணேன். நல்ல பேர்தான் கிடைச்சது. இப்போ 'நான் சிகப்பு மனிதன்’ ஏப்ரல் இரண்டாவது வாரம் ரிலீஸ்னு முடிவெடுத்திருக்கேன். ஏன்னா, சம்மர் ஹாலிடேஸ் ஆரம்பிக்கிறப்போ நான் நடிச்ச படம் வெளிவர ணும்கிறது, என் ரொம்ப நாள் கனவு!''



''ஏன்... ஏப்ரல் 14-ல் அப்படி என்ன ஸ்பெஷல்?''

''அது ஒரு மேஜிக் நாள். ஏன்னா, ஏப்ரல் மாசம் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு நல்ல ரீச் கிடைக்கும். செமத்தியா ஹிட் ஆகும். 'அயன்’, 'பையா’, 'கோ’, 'ஓ.கே. ஓ.கே.’னு பல படங்கள் ஏப்ரல் மாசம் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆச்சு. அந்த பாசிட்டிவ் வைபரேஷன் என் படத்துக்கும் கிடைக்கணும்!''

'' 'நான் சிகப்பு மனிதன்’ டிரெய்லர்ல தூக்க வியாதியால் அவதிப்படும் கேரக்டர்னு ஆர்வம் உண்டாக்கிறீங்க. பஸ் ஏறி வந்து ரவுடிகளை வெளுக்கும் விஷாலுக்கு பிரேக் கொடுத்துட்டீங்களா?''

'' 'பாண்டிய நாடு’வில் சாதுவா அடக்கி வாசிச்சதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். அந்தத் தைரியத்தில்தான் 'நார்கொலெப்ஸி’ வியாதி பாதிக்கப்பட்டவனா நடிக்கிறேன். இயக்குநர் திருவுக்குத் தெரிஞ்ச ஒருத்தருக்கு நார்கொலெப்ஸி வியாதி இருக்கு. 'அந்த வியாதியால் பாதிக்கப்பட்டவங்க, ரொம்பக் கோபம் வந்தா தூங்கிடுவாங்க’னு திரு சொன்னார். ஆனா, அந்த கேரக்டருக்கு எந்த ரெஃபெரன்ஸும் இல்லை. யூ-டியூப்ல நார்கொலெப்ஸி பாதிக்கப்பட்டவங்க வீடியோ பார்த்துதான், ஹோம்வொர்க் பண்ணேன். அந்த வியாதி காரணமா எனக்கு யாரும் வேலை தர மாட்டாங்க. ஆன்லைன்ல வேலை பார்ப்பேன். அந்த வியாதி பாதிக்கப்பட்டவன் அடிச்சா எப்படி இருக்கும்னு உங்களை யோசிக்க வெக்கிற திரைக்கதை. ரொம்பப் புதுசா இருக்கும் படம்!''



''உங்ககூட நடிக்கிறதுனா லட்சுமி மேனன் கிளாமரா நடிக்கிறாங்க, பாலா படத்துல வரலட்சுமி நடிக்க நீங்க சிபாரிசு பண்றீங்க, ஸ்ருதிக்குக் கதை சொல்லப்போறீங்கனு... பல ஹீரோயின்களோட உங்களைச் சம்பந்தப்படுத்தி செய்தி வந்துட்டே இருக்கே!''

''ஓ... லட்சுமி மேனன்கூட தண்ணிக்கு அடியில் இருக்கிற மாதிரி ஸ்டில் பார்த்துக் கேக்கிறீங்களா? அந்த கேரக்டர்ல சின்ன சர்ப்ரைஸ் இருக்கு. நிச்சயம் பரபரப்புக்காகவோ, கிளாமருக்காகவோ அந்த சீன் வெக்கலை. படம் பார்க்கும்போது அது எவ்வளவு அவசியம்னு உங்களுக்குப் புரியும்.

பாலா சார் படத்தில் யாராச்சும் சிபாரிசு பண்ணா, நடிச்சுட முடியுமா என்ன? ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்துதான் வரூவை ஓ.கே. பண்ணாங்க. பாலா சாரின் எல்லாப் படங்களிலும் நான் ஹீரோவா நடிக்கணும். அது மட்டும்தான் என் ஆசை.

நான் இயக்கப்போற படத்துக்கு அப்பப்போ கதை யோசிப்பேன். அப்படி திடீர்னு ஒரு ஸ்பார்க் அடிச்சப்போ, அதில் ஸ்ருதிஹாசன் நடிச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு!''

''அந்தக் கதைக்கு ஹீரோ யார்?''

''நிச்சயமா நான் இல்லை. எப்போ எந்தக் கதை யோசிச்சாலும் விஜய்தான் என் மனசுல வந்து போவார். புது டைரக்டர்களுக்கு அவர்தான் நிறைய ஓப்பனிங் கொடுத்திருக்கார். இப்போ விஜய்க்கு அடுத்து விஜய் சேதுபதிதான் நிறைய புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். ஒருவேளை, நான் இப்போ உதவி இயக்குநரா இருந்திருந்தா, கதை சொல்ல விஜய் வீட்டுக் கதவைத் தட்டியிருப்பேன். இல்லைன்னா விஜய் சேதுபதி வீட்டு காலிங் பெல் அடிச்சிருப்பேன்!''

No comments:

Powered by Blogger.