Header Ads

ஒரு ஊர்ல..சினிமா >> விமர்சனம்

நடிகர் : வெங்கடேஷ்நடிகை : நேகா பட்டேல்இயக்குனர் : கே.எஸ்.வசந்த குமார்இசை : இளையராஜாஓளிப்பதிவு : அருள் வின்சென்ட்
பழைய இரும்பு கடையில் வேலை செய்து வருகிறார் நாயகனாக வெங்கடேஷ். இவர் தாயை இழந்து சரியான அன்பு கிடைக்காத காரணத்தால் வாழ்வதற்குப் பிடிக்காமல் குடித்து விட்டு சாலையில் விழுந்து கிடக்கிறார். இதனால் இவரது அண்ணன், அண்ணி மற்றும் தந்தை ஆகியோர் இவருக்கு சிறிதும் மரியாதை தராமல் அவமதித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தனது அண்ணனுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தையை பார்க்க வீட்டிற்கு வந்த உறவினர் குழந்தையை பார்த்து விட்டு, இறந்து போன உன் தாய் போல் இருக்கிறாள் என்று வெங்கடேஷிடம் சொல்கிறார். இதனால் தாயை இழந்த வெங்கடேஷ் தனது தாயே மீண்டும் குழந்தையாக வந்து பிறந்திருக்கிறாள் என்று நினைக்கிறான். இதனால் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டு, அக்குழந்தையை மிகுந்த அன்போடும் பாசத்தோடும் தன் தோள் மீது போட்டு வளர்த்து வருகிறார். 

இந்நிலையில் வெங்கடேஷின் அண்ணன் ஊருக்கு வெளியே யாருக்கும் தெரியாமல் ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்திருக்கிறார். ஒரு நாள் அப்பெண் தனக்கு தனியாக வீடு வாங்க வேண்டும் என்று பணம் கேட்கிறாள். இதற்கு மறுப்பது மட்டுமல்லாமல் ஆட்களை வைத்து விரட்டியடிக்க முயற்சி செய்கிறார் அவர். இதனால் கோபமடைந்த அப்பெண்ணின் கணவர் வெங்கடேஷின் அண்ணனை பழி வாங்க நினைத்து அவரது மகளை வெங்கடேஷ் பள்ளிக்கு அழைத்துச் சென்ற போது கடத்தி விடுகிறார்.

தனது உயிரையும் மேலாக நினைத்து வளர்த்து வந்த அண்ணன் மகளை பறிகொடுத்தவுடன் மணமுடைந்து போகிறார் வெங்கடேஷ். மறுமுனையில் குழந்தையை கடத்தியவன் அண்ணனுக்கு போன் செய்து 5 லட்சம் பணம் கேட்கிறான். இல்லையென்றால் குழந்தையை கொன்று விடுவதாகவும் மிரட்டுகிறான். 

இறுதியில் குழந்தையை மீட்டார்களா? உயிருக்கு மேலாக குழந்தையை நினைத்து வாழ்ந்து வந்த வெங்கடேஷ் என்ன ஆனார்? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் வெங்கடேஷ், படம் முழுவதையும் தூக்கிச் செல்கிறார். குறிப்பாக சிறுமியோடு இணைந்து இவர் நடித்திருக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிக்க கூடியது. குழந்தைக்காக குடிப்பதை நிறுத்திய இவர், ஒரு நாள் நண்பர்களாக குடித்து விட்டு வீட்டின் முன் உள்ள ரோட்டில் விழுந்து கிடப்பதும், குழந்தை இவரைத் தேடி ரோட்டிற்கே வந்து அவருடன் படுப்பதும் அதைக் கண்டு அவர் வருந்தும் காட்சியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமான பேபி சௌந்தர்யா, இயக்குனரின் சொல்லைக் கேட்டு திறமையாக நடித்து ரசிகர்களின் அன்பை பெறுகிறார்.

இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் தாலாட்டும் ரகம். பின்னணி இசையிலும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார். அருள் வின்செண்ட், வாசன் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகிறது. 

இயக்குனர் வசந்த குமார், அருமையான பாசப்பிணைப்பு கதையை எழுதி அதை மிகவும் நேர்த்தியாக திரைக்கதை அமைத்திருக்கிறார். முன்னணி நட்சத்திரங்கள் இல்லையென்ற எண்ணம் துளியும் எழாமல் படம் பார்ப்பவர்களை ஒரு கனம் கூட தோய்வாகாமல் காட்சிகளை அமைத்திருப்பது இவருடைய திறமையை காட்டுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு இயல்பான கதையம்சம் உள்ள படத்தை இயக்கிய இயக்குனரை பெரிதும் பாராட்டலாம்.

மொத்தத்தில் ‘ஒரு ஊர்ல’ பாசப்பிணைப்பு.

No comments:

Powered by Blogger.