தயாரிப்பாளரோடு பிரச்னையா? மறுக்கிறார் சானியா
இன்றைய தேதியில் அதிக படங்களில் நடிக்கும் நடிகை சானியா தாராதான். ஒருவர் மீது இருவர் சாய்ந்து படத்தில் அறிமுகமான சானியா, இப்போது சங்கராபுரம், பனிவிழும் மலர்வனம், மெய்மறந்தேன், அதுவேற இது வேற, வாராயோ வெண்ணிலாவே, ஒரு சிடி 30 ரூபாய் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மீடியம் பட்ஜெட் படங்களின் மினிமம் கியாரண்டி ஹீரோயினாக வலம் வரும் சானியா தாராவிடம் என்ன கேள்வி கேட்டாலும் சின்ன தயக்கம், சின்ன புன்னகை தவழ வருகிறது பதில்கள்.
நயன்தாரா மாதிரி ஆகணும்னுதானே தாரான்னு முடியுற மாதிரி பேர் வச்சிருக்கீங்க?
அந்த மாதிரியெல்லாம் கிடையவே கிடையாது. அவங்க எங்கேயோ இருக்காங்க. நான் இப்பதான் கேரியரை ஸ்டார்ட் பண்ணியிருக்கேன். நிச்சயம் அவங்க இடத்துக்கு போகணும்னு லட்சியம் இருக்கு. ஆனா, அதுக்காக பெயர் வச்சிக்கல. என் ஒரிஜினல் பெயர் சானிதா ஷேக். பெயருக்கு பின்னாடி ஜாதி பெயர் வேண்டாமேன்னு தாரான்னு சேர்த்துக்கிட்டேன். தாரான்னா அழகான கண்கள்னு அர்த்தம். என் கண்ணு அழகாத்தானே இருக்கு.
நயன்தாரா மாதிரி ஆகணுங்கிறீங்க. அப்படீன்னா லவ்வர் பெயரை டாட்டு குத்திப்பீங்களா?
நான் வளர்ற பொண்ணு. என்னை வம்புல எதுவும் மாட்டி விட்டுடாதீங்க. அவங்க மாதிரி வெரைட்டியா நடிக்கணும்னு சொன்னேன். சீதையாவும் நடிக்கிறாங்க. பிகினியிலேயும் நடிக்கிறாங்க. அப்படி ஆகணும்னு சொல்றேன். மத்தபடி அது அவங்களோட பர்சனல் விஷயம். நான் என்ட லவ்வர் பெயரை டாட்டு குத்திக்க மாட்டேன். மனசுல எழுதிக்குவேன்.
அப்போ லவ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா?
அதுக்குள்ளேவா?! லவ் எனக்கு பிடிக்கும். இப்பதான் படங்கள் வந்துட்டுருக்கு. பிசியா நடிச்சிட்டிருக்கேன். அதனால காதலிக்க நேரமில்லை. யார் மீதாவது காதல் வந்திருச்சுன்னா சினிமால நடிக்கணுங்றதுக்காக காதலை விட்டுட மாட்டேன்.
ஐதராபாத்துல இருந்து கோடம்பாக்கத்துக்கு எப்படி வந்தீங்க?
சத்தியமா சொல்றேன் எனக்கு நடிகையாகணுங்கற ஆசை கொஞ்சமும் கிடையாது. நான் ஒரு கிரிக்கெட் வெறியை. கிரிக்கெட் எங்க நடந்தாலும் போய் பார்ப்பேன். அப்படி ஒரு நாள் சென்னை ஸ்டேடியத்துக்கு கிரிக்கெட் பார்க்க வந்தப்போ ஒருத்தர் என்னை பார்த்துட்டு சினிமால நடிக்கிறீங்களான்னு கேட்டார். அப்பா அம்மாகிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு அவங்க போன் நம்பரை வாங்கிட்டு போயிட்டேன். வீட்டுல பெரிய டிஸ்கசனுக்குப் பிறகு ஓகே சொன்னாங்க. நடிக்க வந்துட்டேன்.
ஒரே நேரத்துல 6 படங்கள்ல நடிச்சிட்டிருக்கீங்களே... எப்படி சமாளிக்கிறீங்க?
6 படத்துலேயும் 6 விதமான கேரக்டர். அது அப்படியே மனசுல இருக்கு. அந்தந்த படத்தோட ஷூட்டிங் ஸ்பாட் போயிட்டா அந்தப் படத்து கேரக்டர்தான் மனசுல இருக்கும். அதனால பிரச்னை இல்லை. ஒரே நாள்ல இரண்டு பட ஷூட்டிங் போக வேண்டியது இருந்தா, கொஞ்சம் சிரமமா இருக்கும். ஆனாலும் சமாளிச்சுக்குவேன்.
சங்கராபுரம் தயாரிப்பாளரோடு பிரச்னை. அதான் அதன் ஆடியோ ரிலீசுக்கு வரலைன்னு பேசிக்கிறாங்களே?
அப்படியெல்லாம் இல்லை. சங்கராபுரம் தயாரிப்பாளர் விஜய் சுகுமாரன், என்மேல அக்கறை உள்ளவர். அந்தப் படத்துல நடிக்கிறப்போ ஒரு ஃபேமிலியோட இருக்குற ஃபீலிங் இருந்திச்சு. ஹீரோ ஹரிகுமாரும் அப்படித்தான். நடிப்புக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார். நிறைய தமிழ் கற்றுக் கொடுத்தார். அந்த பட ஆடியோ பங்ஷன் நடந்தபோது நான் வேறொரு பட ஷூட்டிங்ல இருந்தேன். அதனால கலந்துக்கல.
கிளாமராவே நடிக்கிற மாதிரி இருக்கே?
சில படங்கள்ல கிளாமரா நடிக்கிறது உண்மைதான். கதைக்கு அது அவசியம்னு இயக்குநர்கள் சொல்லும்போது என்னை மாதிரி வளர்ற ஹீரோயின்கள் அதை மறுக்க முடியுமா? இருந்தாலும் உறுத்தாத அளவுக்குத்தான் கிளாமரா நடிக்கிறேன்.
முத்தக்காட்சிக்கு உடனே ஓ.கே. சொல்லிடுறீங்களாமே?
நான் எப்போதுமே அப்படி நடிக்க மாட்டேன், இப்படி நடிக்கமாட்டேன்னு சொல்றதில்லை. என்ன மாதிரி கதை, என்ன மாதிரி சீன் இருக்கும்னு முதல்லயே கேட்டு தெரிஞ்சுக்கிறேன். என்னால பண்ண முடியாத சீன் இருந்தா, அந்தப் படத்தை வேண்டாம்னு சொல்லிடுறேன். ஏத்துக்கிட்டா நடிச்சு கொடுத்துடுவேன்.
ஏன்தான் நடிக்க வந்தோமோன்னு நினைக்க வைத்த சம்பவங்கள் இருக்கா?
சில உண்டு. அதெல்லாம் எதிர்பார்த்ததுதான். எல்லாத் துறையிலும் பெண்களுக்கு சவால் இருக்கு. போராடித்தான் ஜெயிக்கணும். நானும் அப்படித்தான்.
No comments: