Header Ads

அன்புடன் அந்தரங்கம்!

அன்பு சகோதரிக்கு —
திருமணத்தை எதிர்நோக்கியுள்ள, 28 வயது பெண் நான்; உடலுறவு தொடர்பான விஷயத்திற்கு பயப்படுகிறேன். காரணம், கல்லூரியில் படிக்கும் போது, சக மாணவியர் செக்ஸ் பற்றி பேசுகையில், இவ்விஷயம் பெண்ணுக்கு ரொம்பவும் கஷ்டம் என்றும், வலி ஏற்படும், அப்படி, இப்படி என்று, பயமுறுத்தும் விதமாக பேசுவர்.
வயதுக்கு மீறிய உடற்கட்டுடன் இருக்கும் நான், மிகவும் கவனமாக இருக்க விரும்புபவள்; இருமுறை காதல் வலை வீசப்பட்டும், அதில், அகப்படாமல் தப்பித்திருக்கிறேன். காரணம், கணவனை மட்டுமே காதலிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவள் நான்.
என் நெருங்கிய உறவினர் ஒருவர், நான் தனிமையில் இருக்கும் போது, அடிக்கடி வந்து பேசுவார். அப்போது, அவர் பார்வையில் தென்படும் விரசத்தை கவனித்து, நழுவி விடுவேன்.
ஆனால், அவரது மனைவி, பிறரிடம் என்னைப் பற்றி பேசும் போது, 'இவ எப்படிப்பட்டவ தெரியுமா... சேலயே உடுத்த மாட்றா... மாடர்ன் டிரஸ் போட்டுக்கிட்டு அலட்டறா...' என, என் காது பட பேசுகிறார். என்னை எப்போது பார்த்தாலும், முகத்தை, 'கடுகடு'வென வைத்துக் கொள்வதுடன், நான் என்ன செய்தாலும், கிண்டல் செய்கிறார்.
அவரின் இத்தகைய செயல், எனக்கு, மனக் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. உறவினர்களின் விசேஷங்களில், இவர்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளதால், இவர்களை தவிர்க்கவும் முடியவில்லை. இப்பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?
மிகவும் அமைதியான சுபாவம் உடைய நான், நல்ல கணவனை எதிர்பார்க்கிறேன். ஆனால், என் உறவினர், நண்பர் வட்டத்திற்குள் உள்ள ஆடவர்களில் ஒருவர் கூட, மனைவியை பிரியமாய் நடத்துவதாக தெரியவில்லை. எல்லாருமே மனைவி மீது, தங்கள் அதிகாரத்தைச் செலுத்துபவராக உள்ளனர். என் தந்தை கூட அப்படித்தான்.
என் எதிர்பார்ப்பால் தானே, இத்தனை சங்கடங்கள்... இந்த எண்ணங்களை அழிப்பது எப்படி?
எனக்கு நல்ல வழிகாட்டுங்கள் ப்ளீஸ்.

அன்பு சகோதரி—
தங்கள் பிரச்னையை புரிந்து கொண்டேன். முதல் பிரச்னை, உன் மனம் சம்பந்தப்பட்ட பிரச்னையே தவிர, உடல் சம்பந்தப்பட்டது அல்ல. இளம்பருவத்தில் உன்னிடம் மிகத் தவறான கருத்துகளும், சினிமா உதாரணங்களும் சொல்லப்பட்டு இருக்கின்றன. நீ நினைப்பது போல, 'செக்ஸ்' அவ்வளவு வலியை தரக் கூடியது அல்ல.
ஆனால், அது பற்றிய பயமோ, கவலையோ உனக்கு அதிகமாக இருந்தால், அருகில் இருக்கும் மகப்பேறு மருத்துவரிடம் சென்று, உண்மைகளை விவரமாக எடுத்துக் கூறினால், அவர்கள் ஆலோசனையும், வழிகாட்டுதலும் கூறுவர்.
இரண்டாவது பிரச்னை, அழகாக டிரஸ் செய்து கொள்வதால், சொந்தக்காரரின் மனைவி, உன்னை கிண்டல் செய்வதாக, எழுதியிருந்தாய்.
விதவிதமான ஆடை, அணிகலன்களை அணிய, பெண்கள் விரும்புவது இயல்பே! நீ கூறியிருப்பது போல, வயதிற்கு மீறிய உடற்கட்டுடைய நீ, ஆடை, அணிகலன்ளை அணியும் போது, இன்னும், 'ஸ்மார்ட்' ஆக இருக்கிறாய் போலும். அது மற்றவர்களின் கண்களை, ஏன் பெண்களின் கண்களையே உறுத்துகிறது. நீ அப்படி, 'ஸ்மார்ட்'டாக இருப்பது, இறைவன் உனக்கு தந்த கிப்ட்! 
இருமுறை காதல் வலை வீசப்பட்டும், அதிலிருந்து தப்பித்திருக்கிறாய் என்றால், உன் மன உறுதியையும், 'வெட்டு ஒன்று துண்டு இரண்டு' என்று பேசும் முறையை, என்னால் உணர முடிகிறது. அப்படிப்பட்ட பெண், ஏன் மற்றவர்களின் கிண்டல்களை சமாளிக்கவோ, 'டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளவோ முடியவில்லை?
சகோதரி, நீ செய்யும் காரியம் சரி என்று உனக்கு தெரிந்தால், அதை தைரியமாக செய்; ஆனால், செய்த காரியத்திற்காக மனம் வருந்தக் கூடாது. அதுதான் பின்னால் பிரச்னை வளர வித்திடும். நீ, நீயாகவே இரு; பிறரைப் பற்றி, அவர்கள் அடிக்கும் கிண்டல்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
'ஆடவர் ஒருவர் கூட, தங்கள் மனைவியை பிரியமாய் நடத்தியதாக தெரியவில்லை... எல்லாருமே தங்கள் அதிகாரத்தை செலுத்துபவராக உள்ளனர்; - என் தந்தை உட்பட...' என்று கூறியிருக்கிறாய்.
நடைமுறைக்கு ஒத்துவராத எதிர்பார்ப்புகள், உனக்கு அதிகம் இருப்பதையே இது காட்டுகிறது; ஆண்கள் உலகத்தை, கலர் கண்ணாடி அணிந்து பார்ப்பதை தவிர். 'ஆண்களே இப்படித்தான்...' என, நினைக்கும் நினைப்பை மாற்றிக் கொள்.
குறைகளும், நிறைகளும் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது; இத்தனை சொல்கிறாயே... ஏன் உன்னிடம் குறை என்று எதுவுமே இல்லையா... யோசி. மனிதர்களிடம் இருக்கும் நல்லனவற்றை நேசி; அப்போது தான், மனதிற்கு அமைதியும், சந்தோஷமும் கிடைக்கும். ஆண்கள் பற்றிய உன் தேவையில்லாத பயத்தை தூக்கி எறிந்து, மன மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொள். 
உன் திருமண வாழ்க்கை நல்ல படியாக அமைய 
வாழ்த்துகள்!
— என்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

No comments:

Powered by Blogger.