அஞ்சான் படத்திலிருந்து வெளியேற்றப்படுவாரா சந்தோஷ்சிவன்?
இனம் படத்தை இலங்கை தமிழர்களைப்பற்றிய கதையில் சந்தோஷ்சிவன் இயக்குகிறார் என்றபோதே அவருக்கு சில எதிர்ப்புகள் வந்தன. ஆனால் அவர் அதை அலட்சியம் செய்து விட்டார். அதேபோல் அப்படத்தை ரிலீஸ் செய்ய இருந்த லிங்குசாமிக்கும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஆனால் அவர் இதெல்லாம் தனக்கு பப்ளிசிட்டியாகப்போகிறது என்றுதான் நினைத்திருந்தார்.
ஆனால் படம் திரைக்கு வந்தபோது உலகத்தமிழர்கள் மத்தியில் எழுந்த கொந்தளிப்பு படத்தையே தியேட்டர்களில் இருந்து திருப்பி எடுத்துக்கொள்ளும் நிலையை உருவாக்கியது. இந்நிலையில், சந்தோஷ்சிவனை ஒரு பொது விவாதத்துக்கு அழைத்துள்ளது ஒரு தமிழ் அமைப்பு. மலையாளியான அவருக்கு இலங்கை தமிழர்களின் நிலையை விளக்கவே இந்த விவாதமாம். அப்படி அவர் அதில் கலந்து கொள்ளாவிடில் இனி அவர் தமிழில் பணியாற்றும் எந்த படமாக இருந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்றும் முடிவு செய்திருக்கிறார்கள்.
இதையடுத்து, சூர்யா நடிப்பில் அஞ்சான் படத்தை இயக்கி வரும் லிங்குசாமி மேலும் அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம், அந்த படத்தில் சந்தோஷ் சிவன் தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். அவர் தனது படத்தில் நீடித்தால் படம் திரைக்கு வரும்போது மீண்டும் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்குமோ என்று குழப்பத்தில் இருக்கிறாராம். இதனால், அஞ்சானில் இருந்து சந்தோஷ் சிவன் வெளியேற்றப்படலாம் என்று தெரிகிறது.

No comments: