20 ஓவர் உலகக்கோப்பை: இறுதிப்போட்டியில் நுழைந்தது இந்தியா
வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. முதல் அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர் டி காக் 6 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அதன்பின்னர் இணைந்த அம்லா-டுபிளெசிஸ் இருவரும் அபாரமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 16 பந்துகளில் 22 ரன்கள் அடித்த அம்லா, அஸ்வின் பந்தில் விக்கெட்டை இழந்தார். இதேபோல் 58 ரன்கள் விளாசிய டுபிளெசிஸ் விக்கெட்டையும் அஸ்வின் கைப்பற்றினார்.
அதன்பிறகும் தென் ஆப்பிரிக்காவின் அதிரடி தொடர்ந்தது. டுமினியும் (45 நாட் அவுட்), மில்லரும் (23 நாட் அவுட்) இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்க, அந்த அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்தியா, தொடக்கமே முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித்தும், ரகானேவும் அபாரமாக விளையாடி நல்ல தொடக்கத்தை தந்தனர். ரோகித் 24 ரன்னிலும், ரகானே 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய விராட் கோலியும் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை அடித்து நொறுக்கினார். மறுமுனையில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த யுவராஜ்சிங் 18 ரன்னில் அவுட் ஆனார்.
இருப்பினும், கோலி களத்தில் நின்றதால் இந்திய அனியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அவருடன் இணைந்த ரெய்னாவும் அதிரடியில் ஈடுபட்டார். 9 பந்துகளில் 21 ரன்களை குவித்த அவர் இந்திய அணி வெற்றிக்கு 6 ரன்கள் தேவைபட்டபோது விக்கெட்டை இழந்தார். 19-வது ஒவரின் 4-வது பந்தில் கோலி பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் ஒரு சிங்கிள் எடுத்தார். இதனால், வெற்றி ஷாட்டை தோனி அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த ஒவரின் கடைசி பந்தை லேசாக தட்டிவிட்ட டோனி ரன் எடுக்கவில்லை.
இதனால் கடைசி ஒவரை எதிர்கொண்ட கோலி, பவுண்டரி அடித்து இலக்கை எட்டினார். 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவும், இலங்கையும் மோதுகின்றன. தென் ஆப்பிரிக்காவின் சோகம் இந்த உலகக்கோப்பையிலும் தொடர்கிறது.

No comments: