Header Ads

இயக்குனர் விஜய்-நடிகை அமலா பால் காதல் திருமணம்

சென்னை: இயக்குனர் விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இந்த ஆண்டு திருமணம் நடக்கிறது. இதுபற்றி விரைவில் அவர்கள் அறிவிக்கின்றனர்.
அஜீத் நடித்த ‘கிரீடம்’ படம் மூலம் இயக்குனரானவர் விஜய். பிறகு ‘பொய் சொல்லப் போறோம்’, ‘மதராச பட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘தாண்டவம்’, ‘தலைவா’ படங்களை இயக்கினார். தற்போது ‘சைவம்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். தமிழில் ‘வீரசேகரன்’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் அமலா பால். பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ மூலம் பிரபலமானார். தொடர்ந்து ‘தெய்வத்திருமகள்’, ‘வேட்டை’, ‘காதலில் சொதப்புவது எப்படி?’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’,  ‘தலைவா’, ‘நிமிர்ந்து நில்’ படங்களில் நடித்தார். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். ‘தெய்வத்திருமகள்’ படத்தில் நடித்தபோது அமலா பாலுக்கும், இயக்குனர் விஜய்க்கும் நட்பு ஏற்பட்டது.

இந்த நட்பு பிறகு காதலாக மாறியது. இதுபற்றி முதலில் இருவரும் மறுத்தனர். நாளடைவில் அவர்களின் காதல் விவகாரம் வெளியில் தெரிய ஆரம்பித்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சென்னையில் நடந்த ‘சைவம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய சிலர், ‘ஏ.எல்.விஜய்யும், அமலா பாலும் பொருத்தமான ஜோடி’ என்று சூசகமாகச் சொன்னார்கள். இதையடுத்து ஏ.எல்.விஜய்யும், அமலா பாலும் திருமணம் செய்துகொள்வது உறுதி என்ற தகவல் பரவியது. ஜூன் 12ம் தேதி, ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி நகரிலுள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபம் அல்லது கிண்டியிலுள்ள நட்சத்திர ஓட்டலில் அவர்கள் திருமணம் நடக்கும் என்று செய்தி வெளியானது. 

இதுபற்றி விசாரிக்க விஜய்யை தொடர்புகொண்டபோது, அவர் வெளிநாடு சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அமலா தரப்பில் விசாரித்தபோது, ‘விஜய்யும், அமலா பாலும் காதலிப்பது உண்மை. தற்போது அமலா ‘வேலையில்லா பட்டதாரி’, ‘கிட்ணா’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ ஆகிய படங்களிலும், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். அந்தப் படங்களை முடிக்க வேண்டும் என்பதால், இந்த ஆண்டு இறுதியில் திருமணம் பற்றி முடிவு செய்வார்கள். விஜய் சென்னை திரும்பியதும் அவருடன் இணைந்து அமலா பால், இது பற்றி அறிவிப்பார்’ என்று கூறினர்.

No comments:

Powered by Blogger.