Header Ads

வடிவேலு நடிக்கும் தெனாலிராமன் படத்தை தடை செய்ய வேண்டும் தலைமை செயலாளரிடம் மனு

கிருஷ்ணதேவராயர் ராஜாவை கிண்டல் செய்கிறார் என்பதால், வடிவேலு நடிக்கும் தெனாலிராமன் படத்தை தடை செய்ய வேண்டும் என்று தலைமை செயலாளரிடம் தெலுங்கு சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
2 கோடி தெலுங்கர்
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் அலுவலகத்தில், தெலுங்கு சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி சங்க தலைவர் ஜெகதீஷ்வர ரெட்டி கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழகத்தில் 2 கோடி தெலுங்கு மக்கள் வசிக்கின்றனர்.
உணர்வுகளுக்கு பாதிப்பு
தற்போது வடிவேலு நடிக்கும் தெனாலிராமன் என்ற திரைப்படம் மூலம் எங்களது உணர்வுகள் பாதிக்கப்படுகின்றன. 16-ம் நூற்றாண்டில் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் என்ற ராஜாவின் வேடத்தில் வடிவேலு நடிக்கிறார்.
சிறந்த அரசாட்சியையும், நிர்வாகத்தையும் வழங்கி, திராவிட மொழிகளை ஆதரித்த அரசனை நகைச்சுவை வேடத்தில் பயன்படுத்துவது, அவரை அவமதிப்பதாகும்.
கிருஷ்ண தேவராயருக்கு 38 மனைவிகளும், 58 குழந்தைகளும் இருப்பதாக படத்தில் காட்டுகின்றனர். ஆனால் அவருக்கு உண்மையில் அவ்வளவு மனைவி, குழந்தைகள் இருந்ததில்லை.
தடை விதியுங்கள்
ஆனால் கிருஷ்ண தேவராயர் பற்றிய படம் அதுவல்ல என்று தயாரிப்பாளர்களின் தரப்பு மறுக்கிறது. வரலாற்று சம்பவங்களை ஒப்பிட்டு பார்த்தால், அந்த படம் அவரைத்தான் சுட்டிக்காட்டுகிறது என்பது புரியும்.
எனவே எங்கள் சந்தேகம் தீர்க்கப்படும் வகையில், தெனாலிராமன் திரைப்படத்தை திரையிடுவதற்கு முன்பு, வரலாற்று ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், தெலுங்கு அமைப்பினரை கொண்ட குழு, அந்த படத்தை பார்ப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதன் பின்னர், ஆட்சேபனைக்குரிய காட்சிகளை அகற்றுவதற்கு உத்தரவிட வேண்டும். அந்த இரண்டு பேரின் வேடமும் திரைப்படம் முழுவதும் தொடருமானால், முழு படத்தையும் திரையிட தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால், எங்கள் சுயமரியாதை கேள்விக்குரியதாகிவிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.