காணாமல் போன மலேசிய விமானத்திலிருந்து மீண்டும் சிக்னல்
239 பயணிகளுடன் காணாமல் போன மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்து மீண்டும் சிக்னல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து பேட்டரியின் ஆயுள் முடிவதற்குள் கருப்பு பெட்டியை கண்டு பிடிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளது.
கடந்த மாதம் 8ம் தேதி மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.
விமானத்தின் கருப்புப் பெட்டி பாட்டரியின் மூலம் இயங்குவதால் அதன் பாட்டரிகள் 30 நாட்களுக்கு மட்டுமே இயங்கக்கூடிய சக்தி பெற்றவை. இதையடுத்து, பேட்டரியின் ஆயுள் முடிவதற்குள் அதை கண்டுபிடிக்க தேடும் குழுக்களுக்கு இன்னும் ஒரு சில நாட்களே மீதமுள்ளதால் தேடல் பணியில் புதிய சென்சார் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மலேசிய விமானத்தை இந்திய பெருங்கடல் பகுதியில் கடலுக்கடியில் தேடும் முயற்சியில் ஆஸ்திரேலியக் கடற்படை கப்பல் 'ஓஷன் ஷீல்ட்' மற்றும் எச்.எம்.எஸ் 'எக்கோ' என்ற இரண்டு கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன.
இந்த இரண்டு கப்பல்களை தவிர, 11 மிலிட்டரி விமானங்கள், 3 சிவிலியன் ஜெட் விமானங்கள், மற்றும் 14 கப்பல்களும் தேடுதலில் ஈடுபட்டுள்ளன. தேடுதல் நடக்கும் பகுதி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்திற்கு சுமார் 1,700 கி.மீ. வட மேற்கே அமைந்துள்ளது.
தெற்கு இந்திய பெருங்கடலில் தேடுதலில் ஈடுபட்டிருந்த ராணுவ கப்பல் ஒன்று, மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டியின் சிக்னல் கிடைத்ததாக தெரிவித்தது.
இதனையடுத்து, விமானத்தை தேடும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நேற்று மதியம் 5 நிமிடம் 32 வினாடிகளுக்கு முதல் தடவையும், இரண்டாவது முறையாக இரவு சுமார் 7 நிமிடங்களுக்கும் மீண்டும் கருப்பு பெட்டியிலிருந்து சிக்னல் கிடைத்ததாகவும் அதை தொடர்ந்து தேடுதல் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு பெட்டியை கண்டுபிடித்தால் மட்டுமே மலேசிய விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணங்கள் தெரியவரும்.

No comments: