Header Ads

பொள்ளாச்சி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: 11–ம் வகுப்பு மாணவி தற்கொலை

பொள்ளாச்சி கோமங்கலம் அருகேயுள்ள எஸ்.மலையாண்டி பட்டினத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் மோகனபிரியா (வயது 16). அவர் கோமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் பள்ளிக்கு எஸ்.மலையாண்டி பட்டினத்தில் இருந்து பஸ்சில் கோமங்கலம் சென்று படித்து வந்தார்.

பஸ்சில் செல்லும் போது மோகனப்பிரியாவுக்கும் வாலிபர் ஒருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. தினமும் காதலர்கள் பஸ்சில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். மோகனப்பிரியாவின் தோழிகள் அவரை கண்டித்தனர். படிக்கும் வயதில் காதல் வேண்டாம் என்றனர். ஆனால் மோகனப் பிரியா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அந்த வாலிபரிடம் பழகி வந்தார்.

இதனால் மோகன பிரியாவுக்கும், வாலிபருக்கும் இடையே உள்ள காதலை அவரது பெற்றோரிடம் தோழிகள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மோகனப்பிரியாவை கண்டித்தனர். படிக்க அனுப்பினால் காதல் செய்கிறாயா? இனி நீ பள்ளிக்கே செல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டனர்.

இதனால் கோபமடைந்த மோகனப்பிரியா வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று தாழிட்டுக்கொண்டார். இரவு நேரம் என்பதால் அவரது பெற்றோரும் தூங்கி காலை எழுந்தால் சமாதானம் செய்து கொள்வோம் என தூங்கச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் காலை வெகுநேரமாகியும் மோகனப்பிரியா இருந்த அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த மோகனப்பிரியாவின் சகோதரி அறைக்கதவை தட்டிப் பார்த்தார். ஆனால் மோகனப் பிரியாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் அறையின் ஜன்னலை திறந்து பார்த்தனர். அறைக்குள் மோகனப்பிரியா தனது துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார்.

இதைப்பார்த்து மோகனப்பிரியாவின் சகோதரி அலற அவரது உறவினர்கள் விரைந்து வந்து அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். துப்பட்டாவை அறுத்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மோகனப் பிரியாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவலறிந்ததும் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்த கோமங்கலம் போலீசார் மோகனப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Powered by Blogger.