Header Ads

தலைகுனிய வைத்த பிள்ளைகள் – அதிர வைத்த தாய்

நானும் எனது கணவர் மற்றும் எங்களது 2 மகள்களும், 1 மகனுடன் எங்கள் சொந்த ஊரில் 300 ஏக்கர் நில புலன்களோடு  கவுரவமாகவும் சாதி சனம் மதிக்கவும் தலை நிமிர்ந்து வாழ்ந்து வந்தோம்.  யார் கண் பட்டதோ தெரியவில்லை. எங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியும்  ஒற்றுமையும் உருக்குலைந்து, சிதறி, downloadஇன்று முகவரி தெரியாமல் அனாதையாக நிற்கிறோம். எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட  குடும்பத்தினருடன் நெருக்கமாக பழகி வந்தோம்.
ஆனால், எங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் வீட்டில் சம்பந்தம் வைக்கும் எண்ணம் துளியும் இல்லை. அவர்கள் இதைப் பற்றி கேட்ட போதும் மறுத்து  விட்டோம். அதிலிருந்து அவர்களுடனான பேச்சுவார்த்தையையும் நிறுத்திக்கொண்டோம். இந்த நிலையில் என் ஒரே மகனும், மகளும் எங்களை  ஏமாற்றிவிட்டு, ஓடிப்போய் அந்த குடும்பத்தில் உள்ள மகளோடும், மகனோடும் திருட்டுத்தனமாக, அந்த குடும்பத்தின் பெரியவர்கள் உதவியோடு  மூடிய கோயிலின் முன்னே திருமணம் செய்துகொண்டு தலைமறைவாகி விட்டனர். எங்கள் பணத்தின் மீது மட்டுமே குறிவைத்து எங்கள் பிள்ளைகளை பயன்படுத்தி எங்களை நிலைகுலைய செய்து விட்டனர்.



வீடே சவ வீடாக காட்சி அளிக்கிறது. வெளியே தலை காட்ட முடியவில்லை. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் எங்கள் பிள்ளைகள் திரும்ப  கிடைப்பார்களா? எப்படி இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை, பாசத்தாலோ, காதலாலோ அல்லாமல் பணம் பிடுங்க நடந்த இந்தத் திருமணம்  செல்லுமா? கூட இருந்தே குழிபறித்த இந்தக் குடும்பத்தார் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க முடியுமா? 

அன்புச் சகோதரி, ஆறுதல் சொல்வது சுலபம். அதை அனுபவிக்கிறவர்களுக்குத்தான் வலியும் வேதனையும் தெரியும். சில விஷயங்கள் என்னதான்  ஆறுதல் சொன்னாலும் தீராது. உங்கள் நொந்து போன உள்ளங்களுக்கு அந்த இறைவன் மன தைரியத்தையும் எதையும் எதிர்கொள்ளும்  பக்குவத்தையும் அருளட்டும்.  சகோதரி, முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகள் இருவருமே மேஜர். விளைவுகள்  தெரியாதவர்கள் அல்ல, எதைப் பற்றியும் கவலைப்படாமல் இந்த காரியத்தை செய்து இருக்கிறார்கள்.

இன்ஃபாச்சுவேஷன் என்கிற இனக்கவர்ச்சியா அல்லது உண்மையிலேயே காதலா என்று அவர்களுக்கு மட்டும்தான் தெரியும், தெரிய வரும். திருமணம் பதிவு செய்தல் அன்றி செல்லாது. திருமணத்தை பதிவு செய்தார்களா இல்லையா என்பதை அறிந்து கொள்ளுங்கள். பணத்திற்காக  இல்லாமல் காதலால்தான் இத்தகைய செயலை செய்தார்கள் என்று அவர்கள் மார்தட்டி நின்றார்கள் என்றால் அவர்களை விடுதலைப் பத்திரத்தில்  (release deed) கையெழுத்து போட்டு நிரூபிக்கச் சொல்லுங்கள்.

மேலும், ஹேபியஸ் கார்பஸ் ரிட் நீதிமன்றத்தில் வழக்கறிஞரை வைத்து ஃபைல் செய்தால், காவல்துறை அதிகாரிகள் உங்கள் பிள்ளைகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவார்கள். அப்போது அவர்கள் நலன், நிலைமை, எண்ணம், செயலின் காரணம், அனைத்தும் நீதிபதியின் முன்னே வெட்டவெளிச்சமாகும். அதை வைத்து ஓட்டுவதா, வெட்டுவதா என்று தீர்மானியுங்கள்.

மன்னியுங்கள், மறந்துவிடுங்கள் என்று நான் அறிவுரை கூற மாட்டேன். ஏனென்றால் உங்கள் நிலையில் இருந்து பார்க்கும் போது ஏற்பட்ட மன  உளைச்சல், மனக்கொதிப்பு அடங்க, காலம்தான் மனம் வைக்க வேண்டும். ஒரே ஒரு அறிவுரை, இந்தப் பிள்ளைகள் செய்த தவறை மனதில்  வைத்துக்கொண்டு இருக்கும் மகளை சுட்டிக்காட்டி கொடுமை செய்யாதீர்கள்.

No comments:

Powered by Blogger.