Header Ads

நைஜீரியா: இரட்டை குண்டு வெடிப்புக்கு 118 பேர் பலி

நைஜர், மே 21-

மத்திய நைஜீரியாவின் ஜோஸ் நகரில் அடுத்தடுத்து இரண்டு கார் குண்டுகள் வெடித்ததில் 118 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.

நியூ அபுஜா மார்க்கெட் பகுதியில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் முதல் தாக்குதலும், சுமார் அரை மணி நேரம் கழித்து, மினி பஸ் மீது வெடி குண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோத வைத்து இரண்டாவது தாக்குதலும் நடத்தப்பட்டது. இவ்விரு தாக்குதல்களிலும் 118 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. குண்டுகள் வெடித்த இடத்தில் உள்ள பல வீடுகளும், கடைகளும் இந்த தாக்குதலில் பலத்த சேதம் அடைந்தன. சில கட்டிடங்களில் கொழுந்து விட்டெரியும் தீயை அணைக்க மீட்புப் படையினர் கடுமையாக போராடி வருகின்றனர்.

ஜோஸ் நகரில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளின் ரகசிய முகாம்கள் அதிகம் இருப்பதால் இந்த தாக்குதலை அவர்கள்தான் நடத்தியிருக்கக் கூடும் என் போலீசார் கருதுகின்றனர்.

No comments:

Powered by Blogger.