களக்காடு அருகே நர்சிங் மாணவியை கடத்தி கற்பழித்த 5 பேர் கும்பல்
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கேசவநேரியை சேர்ந்தவர் உமா (வயது 19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஏர்வாடியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று பயிற்சி வகுப்புக்காக வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல பஸ் ஏற வந்தார். அப்போது மாணவியின் காதலன் சுரேஷ் என்பவர் அங்கு வந்தார். அவர்கள் 2 பேரும் கேசவநேரி பொத்தை அருகே உள்ள மறைவிடத்தில் நீண்ட நேரம் நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது சிதம்பராபுரத்தை சேர்ந்த 5 வாலிபர்கள், மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்தனர். அவர்கள் சுரேசிடம் 'வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை நீ காதலிக்ககூடாது' என்று கண்டித்து தாக்கி விரட்டினர். பின்னர் உமாவை தாக்கி அங்குள்ள மறைவிடத்திற்கு தூக்கி சென்றனர். அங்கு சென்றதும் உமாவின் கைகளை கயிறால் கட்டி, வாயில் துணியால் அமுக்கி 3 பேர் மாறி மாறி கற்பழித்தனர். இதில் உமா மயக்கமடைந்தார். இதையடுத்து அவர்கள் தப்பி சென்றனர்.
மயக்கம் தெளிந்த உமா, வீட்டிற்கு சென்று நடந்த விவரத்தை கூறினார். உடனடியாக அவரது பெற்றோர் உமாவை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
நாங்குநேரி டி.எஸ்.பி.சண்முகம், களக்காடு இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில் உமாவை கற்பழித்தது சிதம்பராபுரத்தை சேர்ந்த சிங்கப்பாண்டி, சரவணன், மாதவன் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. ஜெகதீசன், ஆர்த்திராஜா ஆகியோர் அவர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
அவர்கள் 5 பேர் மீதும் கற்பழிப்பு, கடத்தி தாக்குதல், தீண்டாமை வன்கொடுமை ஆகிய பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். கற்பழிக்கப்பட்ட மாணவி உமாவுக்கு பாளை அரசு ஆஸ்பத்திரியில் இன்று மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த சம்பவம் களக்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments: