Header Ads

நாளை திருவையாறு விழா: கமலஹாசன் பங்கேற்கும் நிகழ்ச்சியை ரசிகர்கள் இலவசமாக பார்க்க அனுமதி

லஷ்மன்ஸ்ருதி சார்பில் சென்னையில் திருவையாறு இசைவிழா நாளை (18–ந்தேதி) மாலை 4 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தொடங்குகிறது. தொடக்க விழா நிகழ்ச்சியில் ராமபிரான், லஷ்மணர், சீதா, ஆஞ்சநேயர், தியாகராஜர் ஆகிய விக்கிரகங்கள் மேடையில் அமைக்கப்பட்டு சாஸ்திரி மார்களின் சிறப்பு பூஜை நடக்கிறது. 

ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகளின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பத்மபூஷன் பி.எஸ்.நாராயணசாமி தலைமையில் அனைத்து கர்நாடக சங்கீத இசைக் கலைஞர்களும், பாடகர்களும் இசைத்துப் பாடுகிறார்கள். 

இந்நிகழ்விற்கு அனைத்து பக்தர்களும் ரசிகர்களும் வருகை தந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளை கேட்டு பார்த்து ரசிக்கலாம். தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை நன்கு அறிந்த இசைக்கலைஞர்கள் தங்கள் இசைக்கருவியுடன் வருகை தந்து இவ்வைபவத்தில் கலந்து கொண்டு இசைத்துப் பாட அனைவரையும் வரவேற்கிறார்கள். 

பாட விரும்புபவர்கள் லஷ்மன் ஸ்ருதியை தொடர்பு கொள்ளலாம். மேடையில் 300 இசைக்கலைஞர்கள் அமர்ந்து இசைத்துப்பாடும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த இசை விழாவினை நாளை (18–ந்தேதி) மாலை 4 மணிக்கு நடிகர் கமலஹாசன் குத்து விளக்கேற்றி துவக்கி வைக்கின்றார். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் ஆகும். 

திருவையாறில் இசை வல்லுனர்களால் இசைக்கப்படும் தியாகராஜர் ஆராதனை விழாவினை நேரில் சென்று காண இயலாத கண்களுக்கு ‘சென்னையில் திருவையாறு’ நிகழ்வு, ஒவ்வொரு வருடமும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து வருகிறது. 

எட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த இசைவிழாவில் நாளை (18–ந்தேதி) காலை 11.30 மணிக்கு எஸ்.ஆர்.ஜி.எஸ்.மோகன்தாஸ் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் துவங்கி மாலை 4 மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகளோடு துவக்க விழா நடக்கிறது. 

மாலை 5.30 மணிக்கு பிர்ஜு மகாராஜ் கதக் நடன நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு நித்யஸ்ரீ மகாதேவன் வாய்ப்பாட்டு நிகழ்வுடன் நிறைவடைந்து, முதல் நாள் நான்கு நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது. தொடர்ந்து வரும் மற்ற 7 நாட்களில் தினமும் ஏழு நிகழ்ச்சிகளோடு காலை 7 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது. 

தினமும் காலை 7 மணிக்கு நாமசங்கீர்த்தனங்கள், பிரசங்கங்கள், கதா காலட் சேபங்கள், ஹரிகதா, மற்றும் சமய சொற்பொழிவுகள் பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு இலவச பிரசாதங்கள் வழங்கப்படும். 

தினமும் காலை 7.30 மணி, 9 மணி, 10.30 மணி, மதியம் 1 மணி, 2.45 மணி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம். நன்கொடை டிக்கெட்டுகளும் உண்டு. மாலை 4.45 மணி மற்றும் இரவு 7.30 மணி காட்சிகளுக்கு மட்டும் டிக்கெட் விற்பனை உண்டு.

No comments:

Powered by Blogger.