போருக்குப் பின்னர் இன்னுமொரு அழிவை எதிர்நோக்கும் நிற்கும் கிளிநொச்சி வாழ் மக்கள்.
வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த மார்கழித் திங்கள் முழு நிலா கலை விழா சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சு.கிருஸ்ணகுமார் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.விவிக்னேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சி.சிறீதரன், மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கர நேசன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ப.அரியரத்தினம், கே.சயந்தன், சாவகச்சேரி நகர சபைத் தலைவர் இ.தேவசகாயம்பிள்ளை, வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், மாகாணக் கல்விப்பணிப்பாளர் வை.செல்வராசா ஆகியோருடன், வடக்கு மாகாண கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள், கல்வி வலயப் பணிப்பாளர்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது விருந்தினர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.அத்துடன் தமிழர் பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கும் மயிலாட்டம், கோலாட்டம்,கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற கலை நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன.
இந் நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,
இரணைமடு – யாழ்ப்பாண குடி நீர் விநியோகம் நடைமுறைப்படுத்தப்பட்டால் கிளிநொச்சி வாழ் விவசாயிகள் தற்கொலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர். ஒரு பகுதி மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கி அதே வளத்தைப் பயன்படுத்தி இன்னொரு பகுதி மக்களை வாழவைப்பதென்பதை என்னால் ஒருபோதும் ஏற்க முடியாது.
எனவே இத்திட்டத்தை நானும் கிளிநொச்சி மாவட்ட மக்களும் விவசாயிகளும் எதிர்க்கின்றோம். கிளிநொச்சியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்கிறார்கள்.இவர்கள் இரணைமடு நீரை நம்பி ஜீவனோபாயத்தை நடாத்துபவர்கள். ஏற்கனவே யுத்தத்தால் முற்றுமுழுதாக அழிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மக்களின் ஒரேயொரு வாழ்வாதார அடையாளமாக இருப்பது இரணைமடுக் குளம் மட்டுமே.
இந்தத் தண்ணீருக்காக எத்தனையோ காலமாக ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் தான் இந்த மக்கள். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் இரண்டும் போரினால் முற்றாக அழிக்கப்பட்டு அங்கு மீண்டும் மக்கள் குடியமர்ந்து வாழுகின்ற நிலையில் மீண்டும் மற்றுமோர் அழிவுப் பாதையாகத்தான் இரணைமடு யாழ் குடிநீர் விநியோகத் திட்டத்தினைக் கொண்டு வருகிறார்கள் என மக்கள் பார்க்கிறார்கள்.
இரணைமடுக் குளம் 34 அடிகளைக் கொண்டது. 2 அடிகளை உயர்த்தி அந்த மேலதிக நீரைத்தான் யாழ்ப்பாணம் கொண்டு செல்ல நினைக்கிறோம் என அதனைக் கொண்டு செல்ல நினைக்கின்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் இருந்து கிளிநொச்சியில் முப்பத்துநான்காயிரம் ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர் பாய்ச்ச முடியும். ஆனால் சிறுபோகப் பயிர்ச்செய்கையின் போது எட்டாயிரம் ஏக்கர்களுக்கு மட்டுமே நீர் பாய்ச்சக் கூடியதாக உள்ளது.
இந்த எட்டாயிரம் ஏக்கர்களை பதினாறாயிரம் ஏக்கர்களாக மாற்றமுடியுமா என இப் பகுதி விவசாயிகள் கடந்த 70, 80 வருடங்களாகக் கேட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் முப்பத்துநான்காயிரம் ஏக்கர்களுக்கும் சிறு போகத்தில் நீர் வழங்கி அதற்குப் பின்னர் எஞ்சியிருந்தால் அது மேலதிக நீராக இருக்கலாம். இருபத்தெட்டாயிரம் ஏக்கர்களுக்கு நீர் பற்றாக்குறையாக இருக்கையில், மேலதிக நீர் என்பது எங்கிருந்து வரும்?
யாழ்ப்பாண மக்களுக்கு இத்திட்டம் சம்பந்தமான உண்மையான விடயங்களை திட்டத்தோடு தொடர்புபட்டவர்கள் சொல்லவில்லை. இருபதாயிரம் மில்லியன் பணம் திரும்பிப் செல்லப் போகின்றதே என்று மட்டும் கூறுகிறார்கள். இதன் விளைவாக ஒரு மாவட்டம் அழியப்போகின்றதென்றோ ஒரு இனத்தின் வாழ்வு சிதைக்கப்படப் போகின்றதோ என்றோ யாரும் சிந்திப்பதாகத் தெரிய வில்லை.
இவ்வருடம் மழை முழுமையாகப் பெய்திருந்தாலும் குளம் இன்றுவரை 12 அடிவரை மட்டும் தான் நிரம்பியுள்ளது. இதனால் சிறுபோகத்தில் விவசாயிகள் வரண்டுபோன தங்கள் வயல் நிலங்களைப் பார்த்துக் கொண்டிருக்கப்போகிறார்கள்.
எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாயிகள் ஆகியோரை அழைத்துப் பேச வேண்டும். திட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் திட்டத்துடன் தொடர்புபட்ட அதிகாரிகள் எதனையும் பேசவில்லை. தாங்கள் நினைத்ததையே சரி என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
2010ம் ஆண்டு யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த க. கணேஸ் பதவியிலிருந்த போது மேற்படி திட்டம் குறித்து முதலாவதாகப் பேசப்பட்டது. அது நடைபெற்று 3 வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் இதுவரையில் சம்பந்தப்பட்டவர்கள் மக்களுக்கு உரிய விளக்கமளிக்கவில்லை. 2007 இல் மேற்படி திட்டத்திற்கு விவசாயிகளிடம் ஒப்புதல் கையெழுத்து வாங்கியதாகக் கூறியிருக்கிறார்கள். ஆனால் 2010ம் ஆண்டிலேயே கையெழுத்தை வாங்கியிருக்கிறார்கள்.
இவ்விடயத்தைப் பேசுவதா நான் பிரதேச வாதம் பேசுகின்றேன் என யாரும் நினைக்க வேண்டாம். நான் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவன். அதற்கான எங்கள் இனத்தைச் சேர்ந்த ஆயிரமாயிரம் ஏழை விவசாயிகளின் வாழ்வு பறிக்கப்படுவதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நான் சொல்வதும் செய்வதும் தவறென்றால் வரலாறு என்னைத் தூற்றும் சரியாக இருந்தால் போற்றும் எனத் தெரிவித்தார்.
No comments: