உத்தம வில்லனில் 8-ம் நூற்றாண்டு கூத்துக் கலைஞனாக கமல்
விஸ்வரூபம் 2' படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பூஜாகுமார் மற்றும் ஆண்ட்ரியா நடிக்கின்றனர். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது. ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு இசை அமைக்கும் ஜிப்ரானே இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் கதை, திரைக்கதையை கமல் ஹாசனே எழுதியிருக்க, ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் சங்கர் எடிட்டிங் செய்கிறார்.
'உத்தம வில்லன்' படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் 'உத்தம வில்லன்' படத்தின் கதையை படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உத்தமன் என்ற 8-ம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் பாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21-ம் நூற்றாண்டின் சினிமா நட்சத்திரமாக மற்றொரு பாத்திரத்திலும் கமல் நடித்து வருகிறார்.
மனோரஞ்சனை கண்டெடுத்து நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்திய, குருவாக சினிமா இயக்குநர் கே.பாலசந்தர் நடிக்கிறார். மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக இயக்குநர் விஸ்வநாத்தும் நடிக்கின்றனர்.
8-ம் நூற்றாண்டில் நடக்கும் உத்தம வில்லனின் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமாரும், 21ம் நூற்றாண்டுக் கமலின் ரகசியக் காதலியாக ஆண்ட்ரியாவும் நடிக்கின்றனர்.
முத்தரசன் என்ற 8-ம் நூற்றாண்டுக் கொடுங்கோல் சர்வாதிகாரியாக நாசரும், ஜோசப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராமும், ஜெயராமின் வளர்ப்பு மகளாக முக்கிய பாத்திரத்தில் பார்வதி மேனன் நடிக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் சொக்கு செட்டியார் என்ற நினைவில் நிற்கக் கூடிய ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments: