Header Ads

படங்கள் ஓடாததால் தமிழ் பட உலகுக்கு ரூ.200 கோடி இழப்பு: கேயார் தகவல்

வேதநாயகி பிலிம்ஸ் தயாரித்துள்ள 'அலையே அலையே' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடந்தது. விழாவுக்கு பட அதிபரும், டைரக்டருமான வி.சி.குகநாதன் தலைமை தாங்கினார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் கேயார் பாடல்களை வெளியிட, நடிகர் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் டி.இமான் ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டார்கள்.

விழாவில் கேயார் பேசியதாவது:-

"விஜய் சேதுபதி அவர் சம்பந்தப்படாத இன்னொரு படத்தின் 'புரொமோஷனுக்காக' வந்திருந்து பெருந்தன்மையுடன் கலந்துகொள்வதை வரவேற்க வேண்டும். இதேபோல் கமல்ஹாசனும், சூர்யாவும் மற்ற படங்களின் நிகழ்ச்சிகளுக்கு வருவது பாராட்டுக்குரியது.

இன்று நிறைய தொழில் அதிபர்கள் சினிமாவுக்கு வருவது வரவேற்கத்தக்கது. பைலட்டுகள், டாக்டர்கள், சாப்ட்வேர் என்ஜினீயர்கள் எல்லாம் சினிமாவுக்கு வருகிறார்கள். ஒரு காலத்தில் சினிமா என்றால் கேவலமாக நினைத்த நிலைமை இப்போது மாறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரம் படங்கள் சரிவர ஓடாததால், கடந்த ஐந்து மாதங்களில் தமிழ் பட உலகுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த நாலைந்து மாதங்களில் தியேட்டர் வசூல் மிக மோசமாக இருக்கிறது. சென்ற ஆண்டு 164 படங்கள் வெளிவந்தன. 200 படங்கள் வெளிவர முடியாமல் முடங்கிக்கிடக்கின்றன.

கடந்த ஆண்டு மட்டும் 180 புதுமுகங்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களில் எத்தனை பேர் மேலே வந்திருக்கிறார்கள்? இந்த எண்ணிக்கையை நினைத்து பாராட்டுவதா, பயப்படுவதா? என்று தெரியவில்லை."

இவ்வாறு கேயார் பேசினார்.

விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்கள் டி.சிவா, கே.ஈ.ஞானவேல்ராஜா, பட அதிபர்-டைரக்டர் வி.சி.குகநாதன், தயாரிப்பாளர்கள் கில்டு துணைத்தலைவர் ஜாக்குவார் தங்கம், டைரக்டர்கள் சீனுராமசாமி, எஸ்.தங்கசாமி, 'அலையே அலையே' படத்தின் டைரக்டர் ஜி.மணிகண்டகுமார், நடிகர் விஜய்சேதுபதி, நடிகைகள் சுஜாவாருணி, ஐஸ்வர்யா ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள்.

பட அதிபர் ஏ.ஆர்.முருகன் வரவேற்று பேசினார். பட அதிபர் சி.ஜவகர் பழனியப்பன் நன்றி கூறினார்.

No comments:

Powered by Blogger.