Header Ads

வரி செலுத்துவதை தேசிய கடமையாக நினைக்க வேண்டும்: நடிகர் கமல்ஹாசன் பேச்சு

வருமானவரி துறை சார்பில் தேசிய கலைவிழா (2013-14) 2 நாட்களுக்கு சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெறுகிறது. இதன் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி தலைமை தாங்கினார்.

நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வருமானவரி துறை இணை ஆணையர் ஜெயராகவன் வரவேற்று பேசினார். டைரக்டர் ஜெனரல் புலனாய்வு ஜெய்சங்கர், வருமானவரி துறை முதன்மை ஆணையர்கள் சேத்தி, கே.கே.மிஸ்ரா, வருமானவரி துறை ஆணையர் ஆறுமுகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் வருமானவரி துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தேசிய கலைவிழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:-

அனைவரும் தவறாமல் வரி செலுத்த வேண்டும். வரி செலுத்துவதை தேசிய கடமையாக நினைக்க வேண்டும். என் தந்தையாரும் எனக்கு அப்படி தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

உண்மையில் வரி செலுத்துவது என்பது நாட்டின் கட்டமைப்புக்கு நம்முடைய பகுதியாக அல்லது பங்காக நினைத்து நாம் செலுத்த வேண்டும். நானும் அப்படி நினைத்து தான் செய்து வருகிறேன். அடிப்படையில் இந்த எண்ணம் இருந்தால் வரி செலுத்துவதில் எந்த பிரச்சினையும், தயக்கமும் வராது.

பல்வேறு பணி சுமைகளின் மத்தியில் தங்களது திறமைகளை வெளிகாட்ட வந்திருக்கும் உங்களிடத்தில் இருந்து தான் உண்மையான கலை மற்றும் திறமை வெளிவரும். பல்வேறு இடங்களில் இருந்து வந்திருக்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Powered by Blogger.