நடிகர் கவுண்டமணி நடிக்கும் '49-ஓ' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவரது மறுபிரவேசம் தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
இவர் முக்கிய காதாபாத்திரத்தில் நடிக்கும் '49-ஓ' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது. அரசியல் கலந்த நகைச்சுவை படமான இதில் கவுண்டமணி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.
சென்னையை அடுத்துள்ள குன்றத்தூர் அருகே இந்தப் படத்தின் சில காட்சிகள் எடுக்கப்பட்டன. அரசியல் அமைப்புப் பிரிவில் வாக்களிக்க விரும்பாதவர்கள் பயன்படுத்தும் 49-ஓ என்ற உரிமை குறித்த கதையம்சம் இதில் காணப்பட்ட போதிலும் முழுக்க முழுக்க காமெடி கலந்து எடுக்கப்படுவதாக தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது.
டைரக்டர் கெளதம் வாதேவமேனனிடம் உதவி இயக்குனராக இருந்த ஆரோக்கியதாஸ் இந்தப் படத்தை இயக்க உள்ளார். பொங்கல் வரை நடைபெற உள்ள இந்தப் படப்பிடிப்பில் நடிகர் கவுண்டமணி ஒரு விவசாயியாக வந்து அவர்களது பிரச்சனைகளை எடுத்துரைப்பதாகக் கதை செல்கின்றது. படத்தில் தனது பகுதியினை நடிக்கத் துவங்கிவிட்ட கவுண்டமணி மிகவும் உற்சாகமாக உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments: