Header Ads

திருவெண்ணைநல்லூர் அருகே என்ஜினீயரிங் மாணவி தீக்குளித்து சாவு

திருவெண்ணைநல்லூர், டிச.26–

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே மாரங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், விவசாயி. இவரது மகள் பரிமளா (வயது 19) இவர் செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இதற்கிடையே கடந்த 21–ந் தேதி கல்லூரி விடுமுறையில் பரிமளா சொந்த ஊருக்கு வந்திருந்தார். ஆனால் வீட்டுக்கு வந்தது முதல் பரிமளா அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் செல்போனை எடுத்து சோதித்து பார்த்தனர். அப்போது பரிமளா செல்போனில் ஒரு வாலிபரிடம் பேசி வந்ததும், மேலும் அந்த வாலிபரை பரிமளா தீவிரமாக காதலித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பரிமளாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். மேலும் அவசர அவசரமாக இதற்கான ஏற்பாடுகளிலும் இறங்கினர். இதனை அறிந்த பரிமளா திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. ஆனாலும் அவரது பெற்றோர் பிடிவாதமாக தாங்கள் பார்த்து முடிவு செய்யும் மாப்பிள்ளையை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பரிமளாவை கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் காதலனை மறக்க முடியாமலும், அவருடன் பேச முடியாமலும் பரிமளா பரிதவித்தார்.

இதையடுத்து காதலனை தவிர வேறு மாப்பிள்ளையை திருமணம் செய்ய விரும்பாத பரிமளா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மண்எண்ணை கேனை எடுத்துக்கொண்டு வீட்டின் அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரைக்கு சென்றார். அங்கு உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதால் பரிமளா அலறி துடித்தார்.

இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் பரிமளாவை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பரிமளா பரிதாபமாக இறந்துபோனார்.

இதுகுறித்து பரிமளாவின் உறவினர் அன்பழகன் கொடுத்த புகாரின்பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Powered by Blogger.