இளவரசி டயானா கொலை?- கோரிக்கையை நிராகரித்தது பிரிட்டிஷ் போலீஸ்
லண்டன், டிச. 17-
பிரிட்டிஷ் இளவரசர் சார்லசின் மனைவி இளவரசி டயானா (36) கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த 1997-ம் ஆண்டு டயானா தனது காதலர் டோடி அல்பயத்துடன் (எகிப்து தொழிலதிபர்) பிரான்சு ஓட்டலில் தங்கியிருந்துவிட்டு காரில் புறப்பட்டார். அப்போது, பத்திரிக்கையாளர் புகைப்படம் எடுக்க கார்களில் பின் தொடர்ந்து விரட்டினர்.
இதையடுத்து சப்வேயில் நடந்த கார் விபத்தில், அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இதில் அவர்கள் கொலை செய்யப்பட்டனர் என்று குற்றச்சாட்டும் எழுந்தது. பின்னர் நடந்த விசாரணையில் ஓட்டுனரின் கவனக்குறைவால் சாலைவிபத்தில் அவர்கள் உயிரிழந்தனர் என்று வழக்கு முடிக்கப்பட்டது.
இந்நிலையில், ஊடகங்கள் கூறியுள்ளபடி இது சாலை விபத்தல்ல. பிரிட்டிஷ் சிறப்பு படையினரின் உதவியுடன் டயானா கொலை செய்யப்பட்டார் என்று இப்போது சிறப்பு விமானப்படை பிரிவு அதிகாரியின் முன்னாள் மனைவி பிரிட்டன் போலீசில் குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால் டயானா கொலை செய்யப்பட்டார் என்பதற்கு போதுமான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் இதை கொலை குற்றமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று ஸ்காட்லாண்ட் யார்டு போலீசார் அந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர்.
No comments: