Header Ads

மணப்பெண் புகாரால் குழப்பம் மண்டபத்திலிருந்து மணமகன் ஓட்டம்

சென்னை : ஊத்துக்கோட்டைநாகலாபுரம் சாலையில் வசிப்பவர் சுப்பிரமணி. இவரது மகன் சண்முகம். இவருக்கும், ஊத்துக்கோட்டை அருகே தாசுகுப்பம் கிராமத்தை சேர்ந்த முருகேசனின் மகள் ஜெயலட்சுமிக்கும் நேற்று காலை 7.30 மணிக்கு ஊத்துக்கோட்டையில் ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக மணமக்கள் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் மாலையே மண்டபத்துக்கு வந்துவிட்டனர்.அப்போது மணப்பெண் ஜெயலட்சுமி அழுது கொண்டிருந்தார். அங்கு வந்த மாப்பிள்ளையின் அண்ணன் நரசிம்மன், எதற்காக அழுகிறாய் என கேட்டுள்ளார். திருமணம் பிடிக்கவில்லை என கூறியதால் கோபத்தில் ஜெயலட்சுமியை அடித்துள்ளார்.திடீரென ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையம் வந்த ஜெயலட்சுமி, ‘‘எனக்கு திருமணம் பிடிக்கவில்லை. இதனால் மாப்பிள்ளையின் அண்ணன் நரசிம்மன் என்னை அடித்துவிட்டார்‘‘ என இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கத்திடம் கூறினார். 

இன்ஸ்பெக்டர், மகளிர் காவல்நிலைய எஸ்ஐ பாரதியிடம், மாப்பிள்ளை, அவரது அண்ணனை அழைத்து வரும்படி கூறினார். மண்டபத்தில் மாப்பிள்ளை மாயமானதால் மாப்பிள்ளையின் அண்ணன் நரசிம்மன், தந்தை சுப்பிரமணி மற்றும் உறவினர்களை காவல்நிலையம் அழைத்து வந்தார். இதனால் அங்கு வந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதற்கிடையே, அரக்கோணத்தில் மாப்பிள்ளை இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அரக்கோணம் விரைந்தனர். அங்கு அவர் இல்லாததால் போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். மீண்டும் காவல்நிலையம் வந்த ஜெயலட்சுமி, ‘‘எனக்கு அந்த மாப்பிள்ளைதான் வேண்டும், அவரைதான் திருமணம் செய்வேன்‘‘ என கூறி அடம்பிடித்தார்.இதனால் குழப்பம் அடைந்த போலீசார் மாயமான மாப்பிள்ளையை தேடி வருகின்றனர்.

No comments:

Powered by Blogger.