Header Ads

திருமணமான 4 நாட்களில் காதலனுடன் சென்ற புதுப்பெண் பரபரப்பு புகார்

நாகர்கோவில் அருகே திருமணமான 4 நாட்களில் காதலனுடன் சென்ற புதுப்பெண், தங்களை குடும்பத்தினர் கொலை செய்ய தேடுவதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு கொடுத்தார்.

புதுப்பெண் காதலனுடன் புகார்

நாகர்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம்துறை பகுதியை சேர்ந்தவர் அபிநயா (வயது 22). இவருடைய காதலன் அஸ்வின் (22) மற்றும் அஸ்வினின் குடும்பத்தினர் நேற்று நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து, புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அபிநயா கூறியிருப்பதாவது:-

நான் எம்.ஏ. படித்து வருகிறேன். நானும் எங்கள் ஊரை சேர்ந்த அஸ்வினும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்தோம். எங்கள் காதலை குடும்பத்தினர் ஏற்காமல், என்னை கட்டாயப்படுத்தி நல்லூரைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். எனக்கு அவருடன் வாழ பிடிக்காததால், என் காதலனோடு வீட்டை விட்டு சென்றேன்.

இந்நிலையில் நான் காணாமல் போனதாக சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் என்னையும், என் காதலன் அஸ்வினையும் போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது என் காதலனுடன்தான் செல்வேன் என்று, எனது குடும்பத்தாரிடம் கூறிவிட்டேன். இதைத்தொடர்ந்து போலீசார் என்னை அஸ்வினுடன் செல்ல அனுமதித்தனர். நாங்கள் தற்போது கன்னியாகுமரி வாவத்துறையில் வசித்து வருகிறோம்.

அச்சம்

இந்நிலையில் எனது குடும்பத்தினர் எங்களை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, நாங்கள் வசிக்கும் பகுதிக்கே உறவினர்களுடன் வந்து எங்களைத் தேடி அலைகின்றனர். இதனால் நாங்கள் உயிருக்கு பயந்து மறைந்து வாழ்கிறோம். அவர்களால் எங்கள் உயிருக்கு எப்போது ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே தாங்கள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.