சர்ச்சையை கிளப்பிய இலங்கையின் செனனயகே
பர்மிங்ஹாம்: ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் செனனயகே பந்துவீசாமல் இங்கிலாந்தின் பட்லரை ரன் அவுட் செய்த விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து, இலங்கை இடையேயான ஒருநாள் தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி பர்மிங்ஹாமில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 48.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 219 ரன் எடுத்தது. அடுத்து பேட் செய்த இலங்கை 48.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 222 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இப்போட்டியின், 42வது ஓவரை இலங்கை சுழற்பந்து வீச்சாளர் செனனயகே வீசினார். இவர் பந்துவீசும் முறை குறித்து கடந்த போட்டியில் சந்தேகம் கிளப்பப்பட்டிருந்தது. இருந்தாலும் அவர் பர்மிங்ஹாமில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், 42 ஓவரின் 3வது பந்தை வீச அவர் தயாரானார். கிரீஸ் அருகில் செனனயகே வந்த போது, ரன்னர் பகுதியில் நின்றிருந்த இங்கிலாந்தின் பட்லர், கிரீஸ் கோட்டை தாண்டி நின்றார். இதனால், பந்துவீசும் முன்பே பெயில்சை தட்டிவிட்ட செனனயகே அம்பரிடம் அவுட் கேட்டார். ஜென்டில்மேன் கேம் எனப்படும் கிரிக்கெட்டில் இதுபோன்று அவுட் கேட்பது வழக்கமில்லை. ரன்னர் பகுதியில் நின்றிருக்கும் பேட்ஸ்மேனுக்கு எச்சரிக்கை மட்டும் விடுக்கப்படும். ஆனாலும், விதிமுறைப்படி இவ்வாறு அவுட் கேட்கலாம் என்பதால், இது குறித்து அம்பயர், இலங்கை கேப்டனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு கேப்டன் மாத்யூசும் அவுட் கோருவதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து, பட்லருக்கு அம்பயர் ரன் அவுட் கொடுத்து வெளியேற்றினார். இந்த ரன் அவுட் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பட்லரின் சர்ச்சைக்குரிய ரன் அவுட் இங்கிலாந்தின் தோல்விக்கு முக்கிய காரணமாகியுள்ளது. போட்டி முடிந்ததும் மைதானத்தில், இலங்கை கேப்டன் மாத்யூஸ் கைகுலுக்க வந்த போது, இங்கிலாந்து கேப்டன் குக் கடுமையான வார்த்தைகளால் பேசியபடி கடும் கோபத்துடன் சென்று விட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘இப்படி ஒரு அவுட்டை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. பந்துவீச்சாளர் அவுட் கேட்டாலும், கேப்டனின் முடிவுதான் இறுதியானது. ஆனால், மாத்யூசும் சேர்ந்து அவுட் கேட்டது அதிர்ச்சியாக இருந்தது. அணியை வழிநடத்தக் கூடியவரே இப்படி நடந்து கொண்டது மோசமான முன்னுதாரணம்‘ என கூறியுள்ளார்.
இலங்கை கேப்டன் மாத்யூஸ் அளித்த பேட்டியில், ‘நாங்கள் 2 முறை பட்லருக்கு எச்சரிக்கை கொடுத்த பிறகுதான் அவுட் கோரினோம். எங்கள் மீது தவறில்லை. ஒரு வீரர் மீண்டும் மீண்டும் தவறு செய்யும் போது அவரை கட்டுப்படுத்த வேறு வழி தெரியவில்லை. நாங்கள் அவுட் கேட்டதில் எந்த தவறும் இருப்பதாக நினைக்கவில்லை’ என்றார். இதற்கு முன் இதுபோல, இந்திய அணியில் அஸ்வின், சச்சின் ஆகியோர் பந்துவீசும் போது அவுட் கேட்ட போது, கேப்டன்களாக இருந்த டோனி, சேவக் அப்பீல் முடிவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
No comments: