Header Ads

பார்ட்டி வைப்பதற்காக பாட்டியைக் கொன்ற பாசக்கார பேத்தி

பாட்டிக்கும்-பேத்திக்கும் உள்ள பாச பந்தத்தைப் பற்றி ‘பூவே பூச்சூட வா’ திரைப்படத்தில் வெகு கவித்துவமாக விவரிக்கப்பட்டிருக்கும். ஆனால், மைசூரை சேர்ந்த ராமரத்னம்மாள்(72) ‘இப்படி ஒரு பேத்தி நமக்கு வாய்ப்பாள்’ என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். 

சுமார் 15 லட்சம் ரூபாய் நகைகள் மற்றும் ரொக்கத்துக்கு சொந்தக்காரியான ராமரத்னம்மாள், பெங்களூரின் பின்னிபேட் பகுதியில் உள்ள மகன் வீட்டுக்கு வந்து தங்கியிருந்த வேளையில், கடந்த மே மாதம் 10ம் தேதி மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார். 

அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டு, ஈரத் துணியால் கழுத்தை நெறித்துக் கொன்றிருந்ததால், இது ஆதாயக் கொலை என கருதிய போலீசார், வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.

இந்த கொலை தொடர்பாக சரியான துப்பு கிடைக்காததால், குடும்ப உறுப்பினர்கள் மீதும் ஒரு கண் வைத்த போலீசார், கொல்லப்பட்டவரின் பேத்தி ஹர்ஷிதா(19)வின் போக்கை கண்டு சந்தேகப்பட்டு, அவரை மோப்பம் பிடிக்க ஆரம்பித்தனர். 

எஸ்.எஸ்.எல்.சி.யுடன் படிப்பை ஏறக்கட்டி விட்ட ஹர்ஷிதா, பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சகப் பணியாளர்களின் கிளப், ரேவ் பார்ட்டி, டிஸ்கொத்தே ‘லைஃப் ஸ்டைலை’ப் போல் நாமும் வாழ்க்கையை ‘என்ஜாய்’ செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட ஹர்ஷிதாவின் சம்பளம், அவரது ஆசைக் கனவை நிறைவேற்ற போதுமானதாக இல்லை. 

சம்பவத்தன்று, பெற்றோர் அலுவலக வேலையில் இருந்த போது, மாலை 3 மணியளவில் வீடு திரும்பிய ஹர்ஷிதா, உள்ளே பாட்டி ராமரத்னம்மாள் மட்டும் தனியாக துணி துவைத்துக் கொண்டிருப்பதை பார்த்தார். 

நைசாக பாட்டியிடம் சென்று, ‘வயதான காலத்தில் உனக்கு எதற்கு இவ்வளவு நகையும், பணமும்? நான் உன் பேத்தி தானே..., எனக்கு தந்தால் நான் வாலிப வயதில் போட்டு அனுபவிப்பேனே...’ என்று கொஞ்சலாக கேட்டார். தனது சாகசத்தில் பாட்டி சாய்வது போல் தோன்றாததால், ‘மயிலே.. மயிலே.. இறகு போடு! என்றால் போடாது. நாமாகத் தான் பறித்துக் கொள்ள வேண்டும்’ என்று முடிவெடுத்த ஹர்ஷிதா, துணி துவைக்க பயன்படுத்தும் பூரிக்கட்டை போன்ற பெரிய தடியால் பாட்டியை ‘சரி காட்டு’ காட்டினார். 

கத்தியபடியே, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தவரின் நகைகளை பறித்துக் கொண்டு, ஈரத்துணியால் அவரது கழுத்தை நெறித்துக் கொன்று விட்டு ஒன்றும் தெரியாதது போல் வெளியே சென்று விட்டார். 

ஆனால், பாட்டி இறந்த சில நாட்களுக்கு பிறகு, போலீசார் தன்னை மோப்பம் பிடிப்பதை அறியாமல் மல்லேஸ்வரம் பகுதியில் தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் செலவழித்து வைத்த ஆடம்பர பார்ட்டி, ஹர்ஷிதாவை போலீசாரின் வலையில் சிக்க வைத்தது. 

அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், பாட்டியிடம் கொள்ளையடித்த செயின், வளையல்கள் உள்ளிட்ட நகைகளை ஒரு நிதி நிறுவனத்தில் அடகு வைத்து, ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் வாங்கிய விபரம் தெரிய வந்தது. 

இதை விட பெரிய கொடுமை என்னவென்றால், இந்த தகவல் வெளியான பிறகு சோகத்தையும், அவமானத்தையும் தாங்கிக் கொள்ள முடியாமல் ஹர்ஷிதாவின் தந்தை சேகர்(45), தாயார் லட்சுமி(38), அக்கா வர்ஷிதா(21) ஆகியோர் ஷிமாகோ பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து, மூட்டைப்பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றது தான். 

இருப்பினும், தகுந்த நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர்கள் மூவரும் உயிர் பிழைத்தனர். ‘பேத்தி என்றாலும் நீயும் என் தாய்’ என்னும் பாடல் வரி சித்ராவின் குரலில் எங்கு ஒலித்தாலும், பெங்களூர் தமிழர்களுக்கு இன்னும் சில ஆண்டுகளுக்கு ஹர்ஷிதாவின் நினைவு தான் வரும்

No comments:

Powered by Blogger.