Header Ads

திருப்பதியில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த சிறுவன் எரித்துக்கொலை வேன் டிரைவர் கைது

திருப்பதியில் கள்ளக்காதலனுடன் பெண் உல்லாசமாக இருந்ததை ஜன்னல் வழியாக பார்த்த சிறுவன் எரித்துக் கொலை செய்யப்பட்டான். இதுதொடர்பாக, எதிர் வீட்டை சேர்ந்த வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:–
சிறுவன் எரித்துக்கொலை
சித்தூர் மாவட்டம் சந்திரகிரியை அடுத்த தொண்டவாடா பகுதியில் கடந்த மே மாதம் 31–ந்தேதி புதரில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனின் உடல் தீயில் எரிந்த நிலையில் கிடந்தது. இதனை அந்த வழியாக நடந்து சென்றவர்கள் பார்த்து விட்டு, உடனடியாக சந்திரகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ருயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் திருப்பதி பகுதியில் போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த சிறுவன் திருப்பதி சத்தியநாராயணபுரத்தை சேர்ந்தவரும், திருமலை–திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வரும் ஊழியருமான முனிரத்தினம் ரெட்டியின் மகன் முரளிரெட்டி என தெரிய வந்தது. முனிரத்தினம் ரெட்டியிடம் விசாரணை நடத்தியபோது, முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் யாரேனும் தனது மகனை கொலை செய்திருக்கலாம் என தெரிவித்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சந்திரகிரி போலீசார், திருப்பதி அலிபிரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அலிபிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
5–ம் வகுப்பு படித்து வந்தான்
இந்தநிலையில், சத்தியநாராயணபுரத்தை சேர்ந்த வேன் டிரைவர் சோமசேகர்ராஜுவை பிடித்து அலிபிரி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தெரிய வந்த விவரங்கள் வருமாறு:–
திருமலை–திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வருபவர் முனிரத்தினம் ரெட்டி. இவருடைய மனைவி அருணா. இவர்களின் மகன் முரளிதர்ரெட்டி (வயது 10). இவன், திருப்பதியில் உள்ள ஒரு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வந்தான். எதிர் வீட்டில் வசித்து வருபவர் சாமசேகர்ராஜு. இவர், வேன் டிரைவராக உள்ளார். இவருடைய மனைவி சுஜாதா. இவர், திருப்பதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். முரளிதர்ரெட்டி தினமும் பள்ளிக்கு எதிர்வீட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் டிரைவர் சாமசேகர்ராஜுவின் வேனில் சென்று வருவது வழக்கம். வேனில் பள்ளிக்கு சென்று வருவதால் 2 பேரின் குடும்பத்துக்கும் இடையே நட்புறவு ஏற்பட்டது.
வேன் டிரைவருடன் தாய் கள்ளக்காதல்
இந்தநிலையில், முனிரத்தினம்ரெட்டி புதிதாக கார் வாங்கி உள்ளார். அந்த காருக்கு எதிர் வீட்டில் வசிக்கும் சாமசேகர்ராஜுவை டிரைவராக நியமித்தார். அவர், 2 பேரின் குடும்பத்தினரை கோவிலுக்கும், விழாக்களுக்கும் அழைத்து சென்று வந்தார். அவ்வாறு சென்று வந்தபோது சாமசேகர்ராஜுக்கும், அருணாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில், அது கள்ளக்காதலாக மாறியது. திருப்பதி கங்கையம்மன் கோவில் திருவிழா முடிந்ததும் சோமசேகர்ராஜு தன்னுடைய மனைவி சுஜாதா மற்றும் குழந்தைகளை உறவினர் வீடான பீளேருக்கு அனுப்பி வைத்து விட்டார்.
தனி அறையில் உல்லாசம்
மறுநாள் அருணாவும், சோமசேகர்ராஜுவும் ஒரே அறையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதை, சிறுவன் முரளிதர்ரெட்டி ஜன்னல் வழியாக பார்த்து விட்டான். தான், கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்ததை தனது கணவரிடம் மகன் கூறி விடுவானோ என்று அஞ்சிய அருணா, தன்னுடைய மகன் முரளிதர்ரெட்டியை கொலை செய்து விடுமாறு தன்னுடைய கள்ளக்காதலன் சோமசேகர்ராஜுவிடம் கூறி உள்ளார். அதன்படி சம்பவத்தன்று முரளிதர்ரெட்டி வழக்கம்போல் வேனில் பள்ளிக்கு புறப்பட்டான். அவனை, வேனில் அழைத்து சென்ற சோமசேகர்ராஜு சந்திரகிரியை அடுத்த தொண்டவாடா பகுதிக்கு அழைத்து சென்றார். ஒரு மறைவிடத்தில் வைத்து சிறுவன் முரளிதர்ரெட்டியை கொன்று, அவனின் உடலை புதரில் தள்ளி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். மேற்கண்ட விவரங்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
வேன் டிரைவர் கைது
இதையடுத்து, சிறுவன் முரளிதர்ரெட்டியை எரித்துக் கொலை செய்து விட்டு வீட்டுக்கு வந்த வேன் டிரைவர் சோமசேகர்ராஜு ஒன்றும் தெரியாதது போல் இருந்து வந்தார். சந்தேகத்தின் பேரில் அலிபிரி போலீசார், சோமசேகர்ராஜுவை பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சோமசேகர்ராஜு கைது செய்யப்பட்டார். கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்ததை ஜன்னல் வழியாக பார்த்த மகனை, கொலை செய்ய தூண்டியதாக கூறப்படும் சிறுவனின் தாய் அருணாவையும் போலீசார் விரைவில் கைது செய்ய உள்ளனர்.

No comments:

Powered by Blogger.